"டோல்கேட்டில் 100 மீ.க்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது.." கேரள ஐகோர்ட்!
சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கேரள ஐகோர்ட் கூறியுள்ளது.
திருவனந்தபுரம்: சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட் கூறியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணத்தை சுங்கச்சாவடிகள் வசூலிக்கின்றன.
கார் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு ஒரு கட்டணம், பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கும் என தனித்தனியே கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் தற்போது பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சுங்க கட்டணம் வசூல்
துவக்கத்தில் சுங்கச்சாவடிகளில் நேரடியாக பணத்தை செலுத்தி வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால், வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் ஏற்பட்டது .தேவையற்ற நேர விரயமும் ஆனது. இப்போது அந்த நிலை மாறி, பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் நாம் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணங்கள் ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.

கேரள உயர் நீதிமன்றத்தில் மனு
சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு பகுதியை சேர்ந்த நிதின் ராமகிருஷ்ணன் என்பவர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்பாகவும் சுங்கச்சாவடிகளில் சேவை நேரம் தொடர்பான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கொள்கை சுற்றறிக்கையும் அமல்படுத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கட்டணம் வசூலிக்கக் கூடாது
இந்த மனுவை கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முகம்மது முஷ்தாக் மற்றும் ஷோபா அன்னம்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் அணி வகுத்து நின்றால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சொல்வது என்ன?
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதன்படி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவை குறிக்கும் வகையில் மஞ்சள் நிறக் கோடு வரையப்பட வேண்டும். இந்தக் கோட்டினை தாண்டியும் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடிகளை விட்டு வெளியேறலாம்.

10 நொடிகளுக்கு மேல் நிற்கக்கூடாது
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிரிசல் இன்றி செல்வதை உறுதி செய்யும் வகையில் இந்த விதி வெளியிடப்பட்டது. அதாவது சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 நொடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications