தனி ரூமில் பிரசவம்.. பிளாஸ்டிக் கவரில் குழந்தை.. காதலனிடம் கொடுத்தனுப்பிய பெண்.. கேரளத்தில் கொடூரம்
திருவனந்தபுரம்: கேரளத்தில் தனியறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து பெற்றெடுத்த குழந்தையை பாலித்தீன் பையில் போட்டு காதலனிடம் கொடுத்தனுப்பிய நிலையில் காதலன் செய்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்றதாகவும், தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை எனவும் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா பூச்சக்கல் பகுதியைச் சேர்ந்தவர் டோனா ஜோஜி (22). இவர், ராஜஸ்தானில் உள்ள ஒரு கல்லூரியில் ஃபாரன்சிக் சயின்ஸ் படித்து முடித்துள்ளார். பின்னர், திருவனந்தபுரத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக டோனோ ஜோஜி கடும் வயிறு வலியால் துடித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டோனா ஜோஜி ஒரு வாரத்துக்கு முன் குழந்தை பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை சார்பில் சுகாதாரத் துறை அதிகாரிக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில், டோனா ஜோஜிக்கு குழந்தை பிறந்ததாகவும், குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு தனது காதலன் தாமஸ் ஜோசப்பிடம் கொடுத்து அனுப்பிய நிலையில், தாமஸ் ஜோசப்பும் அவரது நண்பனும் சேர்ந்து குழந்தையைப் புதைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, டோனா ஜோஜி, தாமஸ் ஜோசப், அவரது நண்பர் அசோக் ஜோசப் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "டோனா ஜோஜி ராஜஸ்தானில் உள்ள ஒரு கல்லூரியில் ஃபாரன்சிக் சயின்ஸ் படித்து வந்துள்ளார். அங்கு அம்பலப்புழாவை அடுத்த தகழிவிருப்பாலா பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஜோசப் (24) என்பவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வந்துள்ளார். இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், டோனா ஜோஜி படிப்பை முடித்துவிட்டு டிரெயினிங்குக்காக திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளார்.
டோனா ஜோஜி, தாமஸ் ஜோசப் இருவரும் காதலிக்கும்போதே நெருக்கமாக இருந்ததால் அவர் கர்ப்பமாகியுள்ளார். பெற்றோருக்குத் தெரியாமல் மறைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி மிகவும் இயல்பாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாருக்கும் தெரியாத வகையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தனக்குத் தானே பிரசவம் பார்த்ததுடன் தொப்பிள் கொடி துண்டிப்பது உள்ளிட்டவற்றையும் அவரே செய்துள்ளார்.
இதையடுத்து, குழந்தையை துணியில் சுற்றி படிக்கட்டுக்கு கீழே மறைத்து வைத்துவிட்டு தாமஸ் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார். தாமஸ் ஜோசப், அவரது நண்பர் அசோக் ஜோசப்புடன் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு தாமஸ் ஜோசப்பிடம் கொடுத்தனுப்பி உள்ளார். மேலும், 'அம்ம தொட்டில்' என்ற தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கும்படி டோனா ஜோஜி கூறியுள்ளார்.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. சில மணி நேரம் கழித்தே நினைவு திரும்பியது. இதனால், குழந்தைக்கு எந்தவித முதல்கட்ட கவனிப்பையும் செய்யவில்லை. தாய்ப்பாலும் கொடுக்கவில்லை என டோனோ ஜோஜி தெரிவித்துள்ளார். அம்ம தொட்டில்களில் குழந்தையை விட்டிருக்கலாம் என எண்ணி குழந்தையை தேடினோம். ஆனால், தாமஸ் ஜோசப், அசோக் ஜோசப் உதவியுடன் அம்பலப்புழா பகுதியில் ஒரு வயல்வெளிப் பகுதியில் குழந்தையைப் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டோனா ஜோஜியும், தாமஸ் ஜோசப்பும் காதலிப்பது இருவரின் வீட்டாருக்கும் தெரிந்துள்ளது. அவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனிடையே கர்ப்பமான டோனோ ஜோஜி கர்ப்பத்தை கலைப்பதற்காக மாத்திரை சாப்பிட்டுள்ளார். கர்ப்பம் கலைந்திருக்கும் என நினைத்திருந்த நிலையில் டோனா ஜோஜிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்னர் வீடியோ காலில் காதலன் தாமஸ் ஜோசப்பை அழைத்து குழந்தையை காட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications