கடையை விட்டு வெளியே போ.. இடுக்கியில் இஸ்ரேல் பெண்ணை விரட்டிய காஷ்மீர் வியாபாரி.. அதிர்ச்சி காரணம்
திருவனந்தபுரம்: காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடிக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணிகளை கடையை விட்டு வெளியே காஷ்மீர் வியாபாரி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வணிகர் சங்கத்தின் அந்த வியாபாரியை இஸ்ரேல் பெண்ணிடம் மன்னிப்பு கோர வைத்தனர்.
கேரளாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த காலனிட் டோவர்வால்பர் என்ற பெண் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.

இவரது கணவர் பெயர் ஒடெட்வால்பர். இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். இவர்கள் இடுக்கி மாவட்டம் மூணாறில் சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க வசதியாக தேக்கடியில் தாமரகண்டம் பகுதியில் ரெசார்ட்டில் அறை எடுத்து தங்கினர்.
கடந்த 13ம் தேதி காலனிட் டோவர்வால்பர் தனது மாலை 6.30 மணிக்கு தேக்கடியில் உள்ள ‛Incredaible Craft' என்ற பெயர் கொண்ட கடைக்குள் சென்றார். இந்த கடையில் ஆடைகள் மற்றும் கைவிணை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடைக்குள் நுழைந்தவுடன் இஸ்ரேலை சேர்ந்த காலனிட் டோவர்வால்பர் தனது மகளுக்கு செல்போனில் இருந்து வீடியோ கால் செய்தார்.
வீடியோ காலில் இருவரும் ஹிப்ரு மொழியில்(இஸ்ரேல் மக்கள் பேசும் மொழி) பேசினர். இதை கடையில் இருந்த காஷ்மீரை சேர்ந்த வியாபாரி ராவ்டர் பார்த்தார். உடனடியாக அவர், அந்த பெண்ணிடம், ‛‛எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள்'' என்று கேட்டார். அதற்கு காலனிட் டோவர்வால்பர், ‛‛இஸ்ரேலில் இருந்து வருகிறேன்'' என்று கூறினார். அதை கேட்டவுடன் காஷ்மீர் வியாபாரி ராவ்டர், Get Out எனக்கூறி கடையில் இருந்து வெளியே செல்லும்படி கூறினார்.
இதையடுத்து மனம் உடைந்த அந்த இஸ்ரேல் சுற்றுலா பயணி காலனிட் டோவர்வால்பர் எதுவும் பேசாமல் மீண்டும் தான் தங்கியிருக்கும் ரெசாட்டுக்கு திரும்பி சென்றார். அதன்பிறகு நடந்த சம்பவம் பற்றி அவர் உடனடியாக தனது கணவர் ஒடெட்வால்பரிடம் கூறினார். இதையடுத்து அவர் தங்களின் பயணத்துக்கு உதவிய டிரைவரிடம் தகவல் தெரிவித்தார். அந்த டிரைவர் உதவி செய்வதாக உறுதியளித்து சம்பவம் பற்றி அருகே உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
அதன்பிறகு வணிக சங்க நிர்வாகிகள் வலியுறுத்தலின்பேரில் காஷ்மீர் வியபாாரி ராவ்டர், இஸ்ரேல் சுற்றுலா பயணி காலனிட் டோவர்வால்டரிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார். மன்னிப்பு கோரியதால் சம்பவம் குறித்து போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மேலும் தற்போதைய சம்பவத்துக்கு முக்கிய காரணம் இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசா இடையேயான போர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகின்றனர். தற்போது வரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நம் நாட்டில் காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் காசா மீதான போரை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதோடு இஸ்ரேலுக்கு எதிராக வலைதளங்களிலும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி காலனிட் டோவர்வால்டரிடம், காஷ்மீரை சேர்ந்த வியாபாரி ராவ்டர் மூர்க்கத்தனமாக நடந்து வெளியே செல்லும்படி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தான் சம்பவம் குறித்து உளவுத்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தேக்கடியில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் 38 கடைகளை நடத்தி வருகின்றனர். இதில் சில கடைகளை கேரளாவை சேர்ந்தவர்களுடன் இணைந்து காஷ்மீர் மக்கள் நடத்தி வருகின்றனர். தற்போது சம்பவம் நடந்த ‛இன்கிரடபிள் கிராப்ட்' கடையை காஷ்மீரை சேர்ந்த பயாஸ் அகமது ராவ்டர் மற்றும் முகமது ஷபி ராவ்டர் மற்றும் குமுளியை சேர்ந்த தம்பி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications