ஷாக்.. ஓடிய காரில் திடீர் தீ.. திறக்காத கதவால் கர்ப்பிணி மனைவியோடு கருகிய கணவர்.. கேரளாவில் சோகம்
கேரளாவில் மருத்துவமனைக்கு சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்ததில் கதவை திறக்க முடியாததால் குடும்பத்தினர் கண்முன்னே கர்ப்பிணி மனைவியோடு காண்ட்ராக்டர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கண்ணூரில் மருத்துவமனையை நோக்கி சென்ற காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நிலையில் காரின் முன்பக்க கதவை திறக்க முடியாமல் கர்ப்பிணி பெண்ணோடு, அவரது கணவர் உடல் கருகி குடும்பத்தினர் கண்முன்னே இறந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் கலங்கடித்துள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ள குட்டியாட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரஜித் (வயது 32). சிவில் காண்ட்ராக்டர். இவரது மனைவி ரிஷா (28). இந்த தம்பதிக்கு ஸ்ரீபார்வதி (8) என்ற மகள் உள்ளனர். இந்த குழந்தை 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ரிஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் ரிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டனர். காரை பிரஜித் ஓட்டினார்.
அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்
முன் இருக்கையில் தம்பதி
கணவர் பிரஜித்துடன் காரின் முன் இருக்கையில் ரிஷா அமர்ந்திருந்தார். காரின் பின் இருக்கையில் ரிஷாவின் பெற்றோரான விஸ்வநாதன்-சோபா தம்பதி மற்றும் உறவினர் சஜினா ஆகியோர் அமர்ந்திருந்தனர். இவர்களுடன் பிரஜித்-ரிஷா தம்பதியின் மகள் ஸ்ரீபார்வதியும் இருந்தார். இவர்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
திடீரென தீப்பிடித்த கார்
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து காரை பிரஜித் நிறுத்தினார். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரிஷாவின் பெற்றோரான விஸ்வநாதன்-சோபா தம்பதி மற்றும் உறவினர் சஜினா மற்றும் குழந்தை ஸ்ரீபார்வதி ஆகியோர் வேகமாக கீழே இறங்கினர். காரின் முன்பகுதி கதவை திறந்து பிரஜித் மற்றும் ரிஷா ஆகியோரால் காரில் இருந்து உடனடியாக வெளியே வர முடியவில்லை.
தீயில் கருகிய தம்பதி
இதற்கிடையே கார் முழுவதும் தீபரவியது. இதனால் அவர்கள் தீயில் சிக்கினர். இதை பார்த்த குடும்பத்தினர் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து காரின் முன்பக்க கதவை திறந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் இது பலனளிக்கவில்லை. இதனால் தம்பதி காருக்குள்ளேயே தீயில் கருகினர்.
இருவரும் பலி
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக வந்து தீயை அணைத்தனர். காரில் இருந்த கர்ப்பிணி மனைவி ரிஷாவுடன் பிரஜித் இறந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத நிலையில் அந்த பகுதியில் இருந்தவர்களும் கண்கலங்கினர். இதையடுத்து இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணை
இதுபற்றி கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமார் கூறுகையில், ‛‛இந்த விபத்தில் தம்பதி இறந்துள்ளனர். மற்ற நால்வருக்கும் காயம் இல்லை. காரில் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இந்த சம்பவம் இன்று கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதள பக்கங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.