"தப்புக்கு காரணமானவர் சகஜமா நடக்கிறார்".. நடிகை பாலியல் வழக்கில் ஓப்பனாக அடித்த மஞ்சு வாரியர்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பிரபல நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்ப் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள பிரபல நடிகை மஞ்சு வாரியர், "நீதிமன்றத்தின் மீது மதிப்பு இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி வழங்கப்படவில்லை," என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம், கொச்சியில் கடந்த 2017 பிப்ரவரி 17 ஆம் தேதி கொச்சியில் நாடே அதிர்ந்து போகுமளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. எர்ணாகுளத்தில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பிரபல நடிகையை, ஒரு கும்பல் கடத்திச் சென்று ஓடும் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

நடிகை பாலியல் பலாத்கார வழக்கு
பல்சர் சுனில் என்ற நபர் நடிகையைப் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட நடிகை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு திரைப்பட இயக்குநர் வீட்டின் அருகே விடப்பட்டுள்ளார். இதுகுறித்து, அந்த நடிகை காவல் துறையில் புகார் அளித்த நிலையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் பல்சர் சுனில் தாமாக முன்வந்து சரணடைந்தார். மேலும் நடிகையின் கார் ஓட்டுநர், அவரது உதவியாளர் பல்சர் சுனில் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்பிற்கும் தொடர்புள்ளது தெரியவந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டார். வழக்கில் அவர் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
நீதிமன்றம் தீர்ப்பு
திலீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் ஏற்கனவே பகை இருந்த நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்டு திலீப் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினீல் வெளியே வந்தார். இந்த வழக்கை எர்குளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏ1 முதல் ஏ 6 வரை சுனில், மார்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீ, பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் சுனில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திலீப் விடுதலை
அந்த 6 பேருக்கும் 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனை இது என்று தகவல் வெளியானது. முக்கியமாக போதிய ஆதாரம் இல்லாததால் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கேரள சினிமாத்துறை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு விமர்சமனாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகை இதுதொடர்பாக உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நடிகை மஞ்சு வாரியர் தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் மாண்புமிகு நீதிமன்றம் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறேன்.
மஞ்சு வாரியர் அதிரடி
ஆனால் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்டு மூல காரணமாக இருந்தவர் மிகவும் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறார். இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த குற்ற சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் சரி சமமாக தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும்.
இது பாதிக்கப்பட்ட அந்த ஒருவருக்கு மட்டுமல்ல, வாழ்வில் ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு மனிதரும் தங்கள் பணியிடங்களிலும் மற்றும் சாலைகளிலும் அச்சமின்றி தைரியமாக, தலை நிமிர்ந்து நடக்கு உதவும். அவளுடன் அன்றும், இன்றும், எப்போதும் இருப்பேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications