தமிழக- கேரள எல்லையில் காதலன் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் ட்விஸ்ட்.. காதலி வீட்டை தாக்கிய மக்கள்
திருவனந்தபுரம்: தமிழக - கேரள எல்லையில் ஸ்லோ பாய்சனால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலியின் வீட்டை அப்பகுதி மக்கள் சூறையாடினர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் ரேடியாலஜி பிரிவில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது நண்பர் வீட்டின் வெளியில் நிற்க ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

வயிற்று வலி
இதையடுத்து நண்பரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் தெரிவித்தார். கிரீஷ்மா வீட்டில் கசாயமும் ஜூஸும் குடித்த போதிலிருந்து வயிற்று வலி ஆரம்பித்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஷாரோன் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷாரோன் ராஜ்
இந்த நிலையில் ஷாரோன் ராஜின் நண்பர் அளித்த தகவலின்படி ஷாரோனின் தந்தை ஜெயராமன், கிரீஷ்மா மீது போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையை ஷாரோன்ராஜை விஷம் கொடுத்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். மேலும் விசாரணையில் கிரீஷ்மாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

பெற்றோர் சம்மதிக்கவில்லை
ஆனால் கிரீஷ்மா, ஷாரோனை திருமணம் செய்து கொள்ளவிரும்புவதாக தெரிவித்தாராம். இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. அப்போது தாங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பணக்கார இடத்து நபர் என கூறி கிரீஷ்மாவை மூளைச்சலவை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரீஷ்மாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து பார்த்துள்ளனர்.

திருமணம் நிலைக்காது
இதில் கிரீஷ்மாவுக்கு முதல் திருமணம் நிலைக்காது என தெரிவிக்கப்பட்டது. இதை கிரீஷ்மாவிடம் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே ஷாரோன் ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து நைசாக பேசி திருமணம் செய்து கொண்டார் கிரீஷ்மா. இதையடுத்து அவருக்கு மெல்ல கொல்லும் விஷத்தையும் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் விசாரணையில் கிரீஷ்மா ஜாதகத்திற்காக ஷாரோனை கொல்லவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. கிரீஷ்மாவுக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாகவும், ஆனால் ஷாரோன் ராஜுடன் ஊர் சுற்றியதால் அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களால் தனது திருமணத்தில் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் கிரீஷ்மா, ஷாரோனின் போனில் உள்ள புகைப்படங்களை அழித்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஷாரோன் செல்லமாக மறுத்துள்ளார். இதனால்தான் இந்த கொலை நடந்ததாக கிரீஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீடு சூறை
ஏற்கெனவே கேரளாவில் நரபலி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதலனை விஷம் கொடுத்து காதலி கொன்ற சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிரீஷ்மாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications