கேரளா பட்ஜெட்.. திருவனந்தபுரத்தில் தொடங்கும் மெட்ரோ பணிகள்.. கொல்லம்,கண்ணூரில் பிரம்மாண்ட ஐடி பார்க்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பாண்டில் நிச்சயம் தொடங்கப்படும் என்று கேரளா பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொல்லம், கன்னூர் உள்ளிட்ட 3 நகரங்களில் புதிய ஐடி பார்க் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான கேரளா மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநில நிதியமைச்சர் கேஎன் வேணுகோபால் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஐடி துறைக்கும், போக்குவரத்துக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கேரளாவின் முக்கிய நகரமான திருவனந்தபுரத்தில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் வேணுகோபால் கூறுகையில், போக்குவரத்து உள்கட்டமைப்பில் முன்னேற்றம் காண்பதில் கேரளா அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் திருவனந்தபுரம் மெட்ரோ திட்டப் பணிகள் நிச்சயம் தொடங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். அதேபோல் கொச்சி மெட்ரோ திட்டத்திற்கு ரூ.259 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோழிக்கோட்டிலும் மெட்ரோ ரயில் கொண்டு வரும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கவே மெட்ரோ திட்டத்தை பல்வேறு நகரங்களிலும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஐடி துறையை பொறுத்தவரை 3 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், கண்ணூர் மற்றும் கொட்டக்காரா ஆகிய பகுதிகளில் ஐடி பார்க் ரூ.293 கோடியில் அமைக்கப்படவுள்ளது.
கொட்டரக்காரா பகுதியில் ரவி நகர் அருகே 97,370 சதுர அடியில் ஐடி பார்க் அமைக்கப்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல் கண்ணூர் விமான நிலையம் அருகே 25 ஏக்கர் பரப்பளவில் 5 லட்சம் சதுர அடியில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்றும், அதற்காக ஒப்புதல் அரசு தரப்பில் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் மாநகராட்சியுடன் இணைந்து ஐடி பார்க் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக வருவாய் அதிகரிக்கும் என்பதோடு, ஐடி துறையும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications