கேரளாவைப் போல உபி மாறினால்.. யோகி ஆதித்யநாத்துக்கு பட்டியலிட்டு பதிலளித்த பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: உத்தரப்பிரதேசம் கேரளா போல ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், கேரள முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் கேரளாவாக மாறினால் நல்ல கல்வியும், சுகாதார சேவைகளும் கிடைக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் முதற்கட்ட தேர்தலுக்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தேர்தலின் போது நீங்கள் தவறு செய்துவிட்டால், காஷ்மீர், கேரளா, பெங்கால் போல உத்தரப்பிரதேசம் மாற அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சர்ச்சை
என்னுடைய ஐந்து ஆண்டு உழைப்புக்கு, உங்கள் ஓட்டுகள் தான் வாழ்த்தாக அமையும். குற்றம் இல்லாத, பயம் இல்லாத, கலவரம் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசத்தை மாற்ற உங்கள் ஓட்டு வழிவகுக்கும்'' என்று பேசி இருந்தார். யோகி பேசிய சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பினராயி விஜயன்
இந்நிலையில், யோகியின் பேச்சுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டரில் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு, ''யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும். சுகாதார சேவைகள் மேம்படும்.

மக்கள் விரும்புவார்கள்
கேரளாவைப் போல மாறினால, அங்கு சமூக நலம் மேம்படும், வாழ்க்கைத் தரம் உயரும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவும், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் கொலை செய்யப்பட மாட்டார்கள். அதுபோன்றதைத்தான் உத்தரப்பிரதேச மக்களும் உண்மையில் விரும்புவார்கள்'' என்று தன்னுடைய ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார் பினராயி விஜயன்.












Click it and Unblock the Notifications