சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது... பினராயி திட்டவட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், சபரிமலையில் பெண்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது எனவும் அவர் கேரள சட்டப்பேரவையில் ஆணித்தரமாக கூறிவிட்டார்.
இதனால் கேரளாவில் சபரிமலை விவகாரத்தை மையமாக வைத்து மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பினராயி முடிவு
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு தடை விதித்து சட்டம் இயற்றக் கோரி கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், பினராயி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசு பின்பற்றும்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு பின்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பினராயி துணிச்சல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என கடந்த ஆண்டு கேரளாவில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பினராயி விஜயன் அனைத்தையும் துணிச்சலாக எதிர்கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை.

திட்டவட்டம்
பெண்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரம் என்பதால் அதில் தனது அதிகாரத்தை திணிக்க முடியாது என்றும், பெண்களை சபரிமலைக்கு செல்லுமாறு தனது அரசு நிர்பந்திக்கவில்லை எனவும் கூறியுள்ளார். சபரிமலைக்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் பெண்களின் முடிவு என சாதுர்யமாக பதில் தெரிவித்துள்ளார் பினராயி.

விமர்சனம்
முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த பதிலுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications