ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களை அழைத்துவர வேண்டும்.. மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தொழிலாளர்களை திருப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
ஐக்கிய நாடுகள் சபை கணக்கெடுப்பின்படி, தற்போது இந்தியாவில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார்கள்.

ஆனால் அமீரகத்தில், போதிய தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லை என்பது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக ஏப்ரல் 9 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு பினராய் விஜயன் கடிதம் எழுதி தெரிவித்துள்ளார்.
"..குறிப்பாக துபாயில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முறைகள் பயனுள்ளவை அல்லது போதுமானவை அல்ல" என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் அறிந்தபடி, கேரளா மக்கள்வாசிகளில் பெரும்பாலோர் [ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 10 லட்சம்] ப்ளூகாலர் தொழிலாளர்கள் மற்றும் துபாயில் நெரிசலான வசதிகளில் வாழ்கின்றனர், எனவே கொரோனா பரவுவதற்கான சாத்தியம் மிக அதிகம். துபாயில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கு போதுமான உணவு, மருந்துகள், தனிமைப்படுத்தல் மற்றும் அவசர சேவை வசதிகள் கிடைப்பதை, உறுதி செய்ய ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம் இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு பேச வேண்டும்" இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு கடிதத்தை ஷேர் செய்துள்ளார். அதில், திரும்பி வரும் கேரள மக்களின் தேவைகளையும் சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் தேவைகளையும் மாநில அரசு பார்த்துக்கொள்ளும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களை மீண்டும் அழைத்து வர சிறப்பு விமானங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமீரகத்தில் தவிக்கும், கேரளாவை சேர்ந்த மக்களை கேரள அரசே கவனித்துக்கொள்ளும் என பினராயி விஜயன் கூறியுள்ளார். இதேபோல, தமிழக அரசும், அமீரகத்தில் தவிக்கும், மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications