"இந்தியா" கூட்டணிக்கு 'சொந்த செலவில் சூனியம்'? கேரளா சிபிஎம் அரசுக்கு எதிராக காங்கிரஸ் காட்டம்!
திருவனந்தபுரம்: "இந்தியா" கூட்டணியில் சிபிஎம் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் கேரளா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருப்பது புதிய புகைச்சலை கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கேரளா மாநிலத்தில் ஆளும் சிபிஎம் அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளா சிபிஎம் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. "இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸின் இந்த விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன், தனியார் நிறுவனத்திடம் இருந்து மாதம் ரூ1.72 கோடி பணம் வாங்கியதாக ஒரு சர்ச்சை கேரளா அரசியலில் பெரும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்த பிரச்சனையை கேரளா காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக கேரளா எதிர்க்கட்சித் தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் விடி சதீஷன் கூறுகையில், வீணா விஜயன் மீதான புகார் உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் இதுவரை ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் இருக்கிறார். பிரதமர் மோடியைப் போல மவுனம் காத்து வருகிறார் பினராயி விஜயன். முன்னராவது ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து வருவார் பினராயி விஜயன். ஆனால் தற்போது வீணா விஜயன் விவகாரம் உள்ளிட்டவைகளில் பினராயி விஜயன் கனத்த மவுனம் காத்து வருகிறார். ஆகையால் பினராயி விஜயன் ஊடகங்களிடம் இது குறித்து பேச வேண்டும். உரிய விளக்கம் தர வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
மேலும் கேரளா வயநாடு தொகுதியிலேயே ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனை ராகுல் காந்தியிடம் தெரிவிப்போம் என்றார் சதீஷன்.












Click it and Unblock the Notifications