கொரோனாவை போல தீவிரமெடுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு! கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மலப்புரம் பகுதியில் மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல, மலப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலர் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், உயிரிழந்தவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல கடந்த ஜூலை மாதத்திலும் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சுறுத்தல் மேலெழுந்தது. மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை கேரளாவில் உள்ள ஆய்வகங்கள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகம் ஆகியவை உறுதி செய்திருந்தன.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் நிபா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. அதன்படி, நேற்று இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இவரது மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனுடன், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அங்கு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறவை அல்லது விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளை நன்கு சுத்தப்படுத்தியபின் சமைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications