மோடி திறந்து வைத்த சாலையை.. தனியாக திறந்து வைத்த கேரள அமைச்சர்! ஒரு ரோடும் தேர்தல் படுத்தும் பாடும்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்கு ஒரே சாலை திட்டத்தைப் பிரதமர் மோடியும், கேரள மாநில அமைச்சரும் தனித்தனியாகத் திறந்து வைத்துள்ளார். ஒரே சாலையை இப்படி இருவரும் தனித்தனியாகத் திறந்து வைக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தேர்தல் நடைபெறும் கேரளாவுக்குப் பிரதமர் மோடி அண்மையில் வந்து சென்றிருந்தார். இந்த விவகாரம் மத்திய அரசுக்கும், பினராயி விஜயன் அரசுக்கும் இடையே ஒரு புதிய மோதலை உருவாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் இரு சாலைப் பிரிவுகளின் திறப்பு விழாவிற்கு மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் பி. ஏ. முகமது ரியாஸ் அழைக்கப்படாததே இந்தச் சர்ச்சைக்கு அடிப்படைக் காரணம்.

மோதல்
பொதுவாகவே அரசு நிகழ்ச்சிகள் என வரும்போது, மத்திய அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பிரனாயி அமைச்சரவையில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுவே இரு தரப்பிற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
தனித்தனி திறப்பு விழா
தேர்தலுக்கு முன் இந்த திட்டத்திற்கான பாஜக முழுப் பெருமையையும் அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி, இடதுசாரி முன்னணி தலைவர்கள் பிரதமரின் நிகழ்வைப் புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒரு மாற்றுத் திறப்பு விழாவை நடத்தியது. அதில் மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் அமைச்சர் ரியாஸ் சாலைகளைத் திறந்து வைத்தார். மேலும், சாலை நிலம் கையகப்படுத்துதலில் கேரளாவின் பங்கின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கேரள அரசு இத்திட்டத்திற்கு ₹5,500 கோடிக்கு அதிகமாகச் செலவழித்து இருக்கிறதாம். KIIFB வழியாக நிலம் கையகப்படுத்தும் செலவில் 25% செலுத்தியுள்ளது. முடங்கிக் கிடந்த நெடுஞ்சாலைப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு இதுவே உதவியதாகக் கேரளா அரசு தரப்பில் கூறுகிறது. அதேநேரம் தேசிய நெடுஞ்சாலைகள் என்பது மத்திய அரசின் திட்டம்.. நிதி விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
மாறி மாறி குற்றச்சாட்டு
மத்திய அரசு தங்கள் கடன் வரம்பைக் கட்டுப்படுத்துவதாகவும் கேரளா மற்றொரு புகாரையும் முன்வைக்கிறது. கேரளாவுக்கு ஏற்கெனவே அதிக அளவிலான கடன்கள் உள்ளதாக மத்திய அரசு வாதிடுகிறது. கேரளாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே கட்டுப்பாடு தான் என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது. கேரளாவில் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், இது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான மற்றொரு மோதலாக வெடித்துள்ளது.
கேரளா தேர்தல்
கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 140 சீட்கள உள்ளன. அதில் 71 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். அங்கு இப்போது இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தான் பிரதான போட்டி இருக்கிறது. பாஜகவுக்கு அங்கு வலுவான கட்டமைப்பு இல்லை. இருப்பினும், எப்படியாவது அங்கு ஓரிரு இடங்களிலாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக அங்குக் களமிறங்குகிறது.
கேரளாவில் இந்த முறை ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications