கம்யூ., ஆட்சிக்கு முடிவு.. கேரளாவை தட்டித்தூக்கும் காங்.,! பாஜக எவ்வளவு? - Matrize Exit Poll
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 75 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் Matrize தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக எழுச்சி பெற்று அக்கவுண்ட்டை திறக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கேரளாவை எடுத்து கொண்டால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் Matrize Exit Poll முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 75 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி இந்த தேர்தலில் பின்னடைவை சந்திக்கும். இருப்பினும் அந்த பின்னடைவு பெரிய அளவில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 60 முதல் 65 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜக புதிதாக அக்கவுண்ட்டை திறக்க உள்ளது. பாஜக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications