10 ஆண்டுக்கு பின் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி! டூடேஸ் சாணக்யா - என்டிடிவி எக்ஸிட் போல் முடிவு இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று டூடேஸ் சாணக்யா மற்றும் என்டிடிவியின் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த கருத்து கணிப்புகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்தித்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கேரளாவை எடுத்து கொண்டால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது.
டூடேஸ் சாணக்யா கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் Today's Chankya கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி இந்த தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் கூட்டணி 60 முதல் 65 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 3 முதல் 7 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
என்டிடிவி கருத்து கணிப்பு
அதேபோல் என்டிடிவி கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 85 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 55 முதல் 65 தொகுதிகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 0-3 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications