நூலிழை வித்தியாசம்.. கேரளாவில் வெல்வது யார்? காங்.,- கம்யூ இடையே கடும் போட்டி - 3 Exit poll ரிசல்ட்
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது பற்றி எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதில் ஜேவிசி - டைம்ஸ் நவ், பி -மார்க், சிஎன்என் 18 நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான வித்தியாசம் நூலிழையில் தான் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி ஒரே கட்டமாக கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 79.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தை போல் மே 4ம் தேதி கேரளா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் கேரளாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பது தெரிந்துவிடும். இதற்கிடையே தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) மாலை 6.30 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கேரளாவை எடுத்து கொண்டால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி UDF எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி LDF என்றும் அழைக்கப்படுகிறது.
ஜேவிசி - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் JVC - Times Now கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 84 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பின்னடைவை சந்திக்க உள்ளது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகளின் கூட்டணி 52 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 3 முதல் 7 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பி- மார்க் கருத்து கணிப்பு
அதேபோல் 'பி- மார்க்' கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 71 முதல் 79 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 62 முதல் 69 தொகுதிகளில் வாகை சூடலாம் என்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 1 முதல் 4 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் 'பி-மார்க்' கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிஎன்என் -18 கருத்து கணிப்பு
மேலும் சிஎன்என் 18 கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 58 முதல் 68 தொகுதிகளில் வெல்லலாம் எனவும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 0 - 4 தொகுதிகளில் வாகை சூடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications