கேரள லாட்டரிகளை வெளி மாநிலங்களிலும் விற்க அனுமதி! ரூல்ஸ்களில் அதிரடி மாற்றம்! ஆனால் ஒரு கண்டிஷன்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரிகளை வெளிமாநிலங்களிலும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. வருவாயை பெருக்கும் வகையில், கேரள அரசு இந்த முடிவை செய்து இருக்கலாம் எனத்தெரிகிறது. வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்கான ஏஜெண்டுகளையும் விரைவில் நியமிக்க உள்ளதாம். அதேவேளையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்கள் என்றால் எங்கெல்லாம் விற்பனை செய்ய முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் மாநிலமான கேரளா சுற்றுலாவுக்கு பெயர் போனது. அங்குள்ள இயற்கை சூழல்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. டூரிசத்திற்கு அடுத்தபடியாக கேரளா என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது லாட்டரிதான். தமிழகத்தில் இருந்து செல்லும் பலரும் கேரளா பார்டருக்குள் சென்று விட்டோமா என்பதை லாட்டரி கடையை வைத்தே கண்டுபிடிப்பார்கள்.

கேரள லாட்டரி
அந்த அளவு கேரளாவில் லாட்டரி பிரபலம். கேரளாவில் நாள் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறும். ரூ.75 லட்சம் பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகள் அங்கு தினமும் விற்கப்படுகின்றன. இதுபோக பல கோடி ரூபாய் முதல் பரிசுத்தொகை கொண்ட பம்பர் லாட்டரிகளும் வருடத்திற்கு ஆறு விற்கப்படுகின்றன. இதில் அதிகபட்சமாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசு கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கு அடித்தது. அதற்கு முந்தைய ஆண்டு, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கிடைத்தது. தற்போது அங்கு ரூ.20 கோடி முதல் பரிசுத்தொகை கொண்ட கிறிஸ்துமஸ் புத்தாண்டு லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற வுள்ளது.
வெளி மாநிலங்களில் விற்க அனுமதி
கேரளாவில் விற்கப்படும் லாட்டரிகளை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலரும் வாங்குகிறார்கள். குறிப்பாக கேரள லாட்டரிகளை கணிசமான அளவில் வெளிமாநிலத்தவர்கள் வாங்குகிறார்கள் என்றும் கேரள லாட்டரி வியாபாரிகள் சொல்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டுதான் கேரள அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, கேரள லாட்டரிகளை வெளிமாநிலங்களிலும் விற்பனை செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் படி, லாட்டரி விற்பனைக்கு எந்த மாநிலத்தில் அனுமதி உள்ளதோ அந்த மாநிலத்தில் லாட்டரிகளை விற்பனை செய்ய முடியும். இதற்காக விரைவில் வினியோக ஏஜெண்ட்களையும் கேரள அரசு நியமிக்க உள்ளதாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்யப்படவில்லை என்பதை ஏஜெண்டுகள் உறுதியளிப்பது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம் செய்த கேரள அரசு
குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 லட்சம் வரையிலான தொகைக்கு லாட்டரி டிக்கெட்டுகளை ஏஜெண்ட்கள் லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கேரள லாட்டரிகளை வெளிமாநிலத்தில் விற்பனை செய்வதே சட்ட விரோதம் என விதி இருந்தது. தற்போது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இருப்பதன் மூலம், லாட்டரிக்கு அனுமதி உள்ள மாநிலங்களில் கேரள லாட்டரிகளை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய முடியும்.
தமிழகத்தில் விற்க முடியுமா?
கேரள அரசு தனது லாட்டரி சந்தையை விரிவுபடுத்தி வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுத்து இருப்பதாக தெரிகிறது. லாட்டரி ஏஜெண்ட்களும் கேரள அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். அதேவேளையில், லாட்டரிக்கு தடை உள்ள மாநிலங்களில் கேரள லாட்டரிகளை விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.
எடுத்துக்காட்டாக தமிழகம், கர்நாடாகா போன்ற மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் விற்பனை செய்ய முடியாது. தமிழகத்தில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்தால் போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்கள்.












Click it and Unblock the Notifications