கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டும்.. கேரளாவில் கேகே சைலஜாவிற்கு அமைச்சரவையில் வாய்ப்பில்லை.. அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜாவிற்கு முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான எல்டிஎப் அரசில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இடதுசாரி கூட்டணி அங்கு மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் சைலஜாவிற்கு கட்சி விதியின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலங்களில் கேரளா முன்னிலை வகித்து வருகிறது. உலக சுகாதார மையமே பாராட்டும் வகையில் கேரள கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருந்தது.
கேரள மாடல் இந்திய முழுக்க பாராட்டப்படும், பின்பற்றப்படும் வகையில் கொரோனாவிற்கு எதிராக அந்த மாநிலம் சிறப்பாக செயல்பட்டு இருந்தது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி எல்டிஎப் கூட்டணி மீண்டும் வெற்றிபெற கூட கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையே முக்கிய காரணமாக இருந்தது.
காரணம்
கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா முக்கிய பொறுப்பு வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சராக எப்போது மக்களோடும், அதிகாரிகளோடும் இவர் தொடர்பில் இருந்து முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். வார் ரூம் அமைப்பது தொடங்கி மாவட்ட வாரியாக திட்டங்களை வகுப்பது வரும் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா சிறப்பாக செயல்பட்டார்.
சிறப்பு
டீச்சர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா கேரள மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்டார். அதோடு நிப்பா வைரஸ் தாக்குதலுக்கு எதிராகவும் கேரளாவில் கேகே சைலஜா செயல்பாடு பாராட்டப்பட்டது. மக்கள் மத்தியில் இவர் பெரிய அளவில் மதிப்பு பெற்றுள்ள நிலையில் மீண்டும் அங்கு ஆட்சியை பிடித்து இருக்கும் இடதுசாரி கூட்டணியில் கேகே சைலஜாவிற்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
அமைச்சரவை
கேரளா அமைச்சரவையில் இருந்து கேகே சைலஜா நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான புதிய எல்டிஎப் அரசில் சைலஜாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கேரளாவில் எல்டிஎப் கூட்டணியில் மொத்தம் 21 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 12 அமைச்சர்கள் இதில் சிபிஎம் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
4 அமைச்சர்கள்
சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது போக கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் ஆகிய நான்கு காட்சிகளில் இருந்து தலா ஒரு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பினராயி விஜயன்தான் அமைச்சர்களுக்கான துறைகளை இனி தேர்வு செய்வார், அவர் எடுப்பதே முடிவு என்று சிபிஎம் கேரள மாநில செயலாளர் ஏ விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு இல்லை
பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள், இளம் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார், மற்றும் எம்.வி.கோவிந்தன் போன்ற சிபிஎம் தலைவர்களுக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
எப்போது
கேகே சைலஜா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு இருந்து கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிபிஎம் கட்சி விதியின் காரணமாக அங்கு முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பினராயி விஜயன் மட்டுமே மீண்டும் வாய்ப்பு பெறுகிறார். வேறு அமைச்சர்கள் யாரும் மீண்டும் அமைச்சராகவில்லை. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்ட சைலஜாவிற்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவை கேரளாவில் வரும் மே 20ம் தேதி பதவியேற்க உள்ளது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளது.