Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒன்றரை வயது குழந்தை அதன் தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
ஒரு பிஞ்சு உடலால் எவ்வளவு வலியைத் தாங்கிவிட முடியும்? பசித்தால் அழ மட்டுமே தெரிந்த, இன்னும் மழலை பேசக் கூடத் தொடங்காத ஒரு ஒன்றரை வயதுக் குழந்தை, இந்த மனித மிருகங்கள் வாழ்ந்து வரும் உலகில் அனுபவித்த நரக வேதனையைக் கேட்டால் எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சமும் உருகிவிடும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த மனிதகுலத்தையுமே தலைகுனிய வைத்துள்ளது. அர்ஷித் என்ற அந்த ஒன்றரை வயதுப் பாலகனின் மரணம் வெறும் விபத்தோ அல்லது இயற்கை மரணமோ அல்ல; அது சித்ரவதையின் உச்சக்கட்ட அரக்கத்தனம் என்பதைப் பிரேதப் பரிசோதனை அறிக்கை அழுதுகொண்டே வெளிப்படுத்தியுள்ளது.
91 காயங்கள்... 7 உடைந்த விலா எலும்புகள்!
நெடுமங்காடு துணை காவல் கண்காணிப்பாளர் (DySP) பைஜூ குமார் வெளியிட்டுள்ள முதற்கட்ட மருத்துவத் தகவல், கேட்போரின் ரத்தத்தை உறைய வைக்கிறது. அந்தப் பிஞ்சு உடலில் மொத்தம் 91 காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்!
அதுமட்டுமா? மூச்சுவிடக்கூட முடியாத அளவிற்கு அந்த குழந்தையின் 7 விலா எலும்புகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. குழந்தையின் இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருந்தன. "படிக்கட்டுகளில் இருந்து விழுந்ததால் ஒரு கை உடைந்திருக்கலாம்" என்று அந்த நபர்கள் நாடகமாடியுள்ளனர்.
ஆனால், அந்தப் பிஞ்சை கட்டிப்போட்டு, கொடூரமாகத் தாக்கியே கைகள் உடைக்கப்பட்டுள்ளன என்பதைப் போலீஸ் சந்தேகம் உறுதிப்படுத்துகிறது.
சிகரெட் சூடுகள்... தொடர் சித்திரவதை!
அந்தக் குழந்தையின் உடலில் இருக்கும் காயங்கள் அனைத்தும் ஒரே நாளில் ஏற்பட்டவை அல்ல. சில காயங்கள் புதியவை, பல காயங்கள் பல நாட்களாக அந்தப் பிஞ்சு உடலை வதைத்த பழைய காயங்கள். அதாவது, அந்தக் குழந்தை நீண்ட நாட்களாக பசியோடும், வலியோடும், நரக வேதனையோடும் அந்த இருட்டறைக்குள் அழுது கொண்டே வாழ்ந்திருக்கிறது.
இதயமே இல்லாத அந்த மிருகங்கள், அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு சிகரெட்டால் சூடு போட்டு மகிழ்ந்துள்ளனர். அந்தத் தழும்புகள் குழந்தையின் உடல் முழுவதும் வடுக்களாகக் காட்சியளிக்கின்றன.
தாயின் துரோகமும்... கள்ளக்காதலனின் கொடூரமும்...
இந்தக் கொடூரத்தின் பின்னணியைக் கேட்டால் பெற்ற தாயின் மீதே வெறுப்பு உண்டாகும். அர்ஷித்தின் தந்தை இறந்த பிறகு, அவனது தாய் அகிலா (24) தன் பெற்றோர் வீட்டில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, அஷ்கர் (31) என்பவனுடன் குடும்பம் நடத்தச் சென்றுள்ளார். பின்னர் குழந்தையையும் தங்களுடனேயே கூட்டிச் சென்றுள்ளனர்.
கடந்த மே 29 அன்று, அஷ்கர் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பதறியபடி ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓடியுள்ளான். "சாப்பிடும்போது சாப்பாடு தொண்டையில் சிக்கிக் கொண்டது (Choked)" என்று மருத்துவர்களிடம் கதையளந்துள்ளான். ஆனால், மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்தனர். அந்தச் சமயத்தில், தாய் அகிலா தமிழகத்தில் ஒரு நடன நிகழ்ச்சிக்காக வந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நீதியின் கதவுகள் திறக்குமா?
உணவு, விக்கல் என்று அஷ்கர் சொன்ன பொய், பிரேதப் பரிசோதனை அறையில் தவிடுபொடியானது. குழந்தையின் உடலெங்கும் இருந்த ரத்தக் கட்டுகளும், உடைந்த எலும்புகளும், சிகரெட் சூடுகளும் அவனது கொடூர முகமூடியைக் கிழித்தன.
இதையடுத்து, மே 31 அன்று கொலையாளி அஷ்கரையும், தன் குழந்தையைக் காப்பாற்றாமல் இக்கொடூரத்திற்குத் துணையாக இருந்த தாய் அகிலாவையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். அஷ்கர் மீது கொலைக் குற்றம், குழந்தைகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாரோ செய்த பாவங்களுக்காக, எந்தத் தப்பும் அறியாத அந்தப் பிஞ்சு உயிர் 91 காயங்களோடு, உடைந்த எலும்புகளோடு, சொல்லத் தெரியாத வலியோடு இந்த உலகை விட்டுப் பிரிந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications