"ஹை அலர்ட்.." கேரளாவில் காய்ச்சலால் அடுத்தடுத்து இருவர் பலி! நிபா வைரஸ் பாதிப்பு என சந்தேகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும் திரும்புவோரும் அதிகம். இதன் காரணமாகவே எந்தவொரு புது பாதிப்பு ஏற்பட்டாலும் அது கேரளாவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் கூட இந்தியாவில் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளா உயிரிழப்பு: இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அலர்ட் மோடில் இருக்கிறது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் திடீரென உயிரிழந்த நிலையில், அம்மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல உயிரிழந்தவர்களில் ஒருவரின் உறவினர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில், நேற்றிரவு சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் உடனடியாக உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார். மாநிலத்தில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பாதிப்பு: கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி 49 வயது ஆண் உயிரிழந்தார். அவரது மகன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இரண்டாவதாக 40 வயதான நபர் திங்கள் இரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் நிப வைரசுக்கான சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இறந்த நோயாளிகள் காய்ச்சல் மற்றும் நிமோனியா அறிகுறிகளுக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர். உயிரிழந்த இருவரின் வீடுகள் 20 கிமீ தூரத்திற்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
அச்சம்: இப்போது வரை கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு முறை நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கடந்த மே 2018 இல் பெரம்பராவில் நிபா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2021இல் கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபாவால் உயிரிழந்தார். அப்போது அவர் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications