கேரளா உள்ளாட்சி தேர்தல்.. இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு.. காலை முதலே ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய இன்று உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதலாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 9ம் தேதி முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் டிசம்பர் 12ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடைபெறுகிறது. அங்கு இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. கேரளாவில் ஏழு வடக்கு மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க 1.53 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வழக்கம் போல வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வரிசையில் இருக்கும் அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
முதற்கட்டமாகக் கடந்த டிசம்பர் 9ம் தேதி தென் மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தச் சூழலில் இன்று வடக்கு மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி களத்தில் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்த 3 தரப்புமே தீவிரமாகப் பிரச்சாரத்தை நடத்தியிருந்தன.
இன்றைய தேர்தலில் மொத்தம் 38,994 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 470 கிராமப் பஞ்சாயத்துகள், 77 பிளாக் பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 47 நகராட்சிகள் மற்றும் கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகள் என 604 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
கண்ணூர், மலப்புறம் மாவட்டங்களில் 2,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைப் பதற்றமானவை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 18,274 மையங்களில் நியமிக்கப்பட்ட தேர்தல் பணியாளர்கள், வாக்குப்பதிவு தொடங்கும் முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குகளைப் பதிவுசெய்து, வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்தே காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. அங்குப் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இந்த இரு கட்டங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் டிசம்பர் 13ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications