கேரளாவில் ஓர் டெவில்ஸ் கிச்சன்.. அருவியில் சிக்கிய மதுரை இளைஞர்.. தப்பி பிழைத்த அதிசயம்
இடுக்கி: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கேரளாவில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா வந்த ஒருவர், குகைக்குள் விழுந்து காப்பாற்றப்படுவது குறித்து சொல்லப்பட்டிருக்கும். இதேபோல தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்று அருவி பாறையில் தவறி விழுந்த தமிழ் இளைஞரை கேரளா மக்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீக் எண்ட் என்றால் மக்கள் கொண்டாட்ட மனநிலைக்கு செல்வது இயல்பு. பலர் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிலும் நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. மலை, கடல் என்று பிரதேசங்களும் அங்கு அதிகளவு உள்ளன. அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மதுரையில் இருந்த 4 பேர் கொண்ட நண்பர்கள் குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூணாறு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நெடும்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அதில் ஒருவர் அருவியில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். செல்ஃபி மோகத்தில் அவர் அந்தப் பாதையை சரியாக கவனிக்கவில்லை.
இதையடுத்து கால் தடுக்கி அவர், பாறையில் விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் பாறையை பிடித்துக் கொண்டதால் கீழே விழுகவில்லை. இளைஞர் பாறையை பிடித்து தொங்கி, காப்பாற்றுங்க என்று கதற தொடங்கினார். அவரின் நண்பர்களும் அக்கம், பக்கத்தினரிடம் அழுது உதவி கேட்டுள்ளனர். உள்ளூர் வாசிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து விட்டனர்.
ஆபத்தை உணர்ந்து கயிறு உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்து சென்றுவிட்டனர். காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு எல்லாம் தகவல் சொல்லி வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால், உள்ளூர் மக்களே இளைஞரை மீட்கும் ஆபரேஷனில் இறங்கினார்கள். அந்த இளைஞரை சுற்றி கயிரை கட்டி, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் வருவது போல, அவரை பத்திரமாக மீட்டனர்.
இளைஞர் மற்றும் அவரின் நண்பர்கள் உள்ளூர் மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வந்தனர். கேரளாவில் உள்ள இந்த தூவல் அருவி சுற்றுலா பயணிகளிடம் மிகவும் பிரபலம். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால், அந்த ரம்மியமான இடத்தைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.
அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கத்தானே செய்யும். தூவல் அருவியும் அப்படித்தான். எப்படி கொடைக்கானல் குணா குகைக்கு ஒரு அதிர்ச்சி பின்னணி உள்ளதோ அப்படி தூவல் அருவிக்கும் அதிர்ச்சி பின்னணி உள்ளது. பருவமழை காலத்தில் அந்த அருவி மிகவும் ஆபத்தானது. கரடு முரடான பாறைகளில் பார்த்து நகராவிடின் காப்பாற்றுவது மிகவும் கடினம்.
கடந்த சில வருடங்களில் மட்டும் அந்த அருவியில் தவறி விழுந்து 12 பேர் உயிரிழந்தனர். கடந்த வருடம் கூட 2 இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர். அரசு மற்றும் உள்ளூர் மக்கள் தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டும், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் பாறை முனை வரை செல்வதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications