Kerala Lottery: கோவை போயிட்டு வரும்போது வாங்கிய டிக்கெட்! பாலக்காட்டில் 10 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பூரிப்பு
திருவனந்தபுரம்: கேரள சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசு ரூ.10 கோடி மலப்புரம் மாவட்டத்தின் பரப்பனங்காடிக்கு உட்பட்ட நெடுவாவைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு அடித்துள்ளது. தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய வழியில் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார் பத்மநாபன்.
லாட்டரி டிக்கெட்டுகளை அதிகம் வாங்கும் பழக்கம் இல்லாத பத்மநாபனுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து அடித்துள்ளது. முதல் பரிசு அடித்த பத்மநாபன் கூறிய தகவலை இங்கே பார்க்கலாம்.

தமிழருக்கு அடிக்கவில்லை
கேரளாவில் லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த சம்மர் பம்பர் டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. ரூ.250 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி அடிக்கும் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கியிருந்தனர். இந்த லாட்டரியில் SB 517026 -என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்தது.
பாலக்காட்டில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் என்பதால் முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி தமிழராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், இதில் முதல் பரிசு கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த என்.வி பத்மநாபன் என்பவருக்கு அடித்துள்ளது.
இரக்க குணத்துடன் வாங்குவேன்
கனவிலும் நினைத்து பார்க்காத தொகை ஒரே நாளில் அடித்துள்ளதால் மகிழ்ச்சியில் திளைக்கும் அதிர்ஷ்டசாலி கூறியதாவது:- தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பாலக்காடு வழியாக மலப்புரம் செல்ல திட்டமிட்டேன். அப்போது பாலக்காடு ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்றேன்.
அங்கு அருகில் இருந்த ஒரு லாட்டரி கடையில் ஒரு பம்பர் டிக்கெட்டை வாங்கினேன். நான் லாட்டரி டிக்கெட்டை அதிகம் வாங்க மாட்டேன். எப்போதாவது ஒருமுறை மட்டுமே வாங்குவேன். லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள வயதானவர்களை பார்த்தால் அவர்கள் கஷ்டப்படுகிறார்களே என நினைத்து இரக்க குணத்துடன் வாங்குவேன்.
மனைவி, பிள்ளைகளிடம் தான் சொன்னேன்
மாதத்திற்கு ஒரு டிக்கெட், சில முறை டிக்கெட்டே கூட வாங்க மாட்டேன். பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அந்த எண்ணை செக் செய்யவில்லை. நேற்று முன் தினம் காலை எனது போனை பயன்படுத்தும் போதுதான் பரிசு விழுந்தது தெரியவந்தது. பரிசு விழுந்த தகவல் கிடைத்ததும் முதலில் எனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தான் சொன்னேன்.
லாட்டரி பரிசு விழுந்ததால் நான் பெரிதாக மகிழ்ச்சி அடையவோ.. ரொம்ப பரபரப்பு அடையவோ இல்லை. ஏனெனில் பல கோடிகள் வரும் போகும்.. நான் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்தேன். சமீபத்தில்தான் அதை விற்றுவிட்டு அங்கேயே வேலைக்கு சேர்ந்தேன். பரிசாக விழுந்த பணத்தை கவனமாகவும் நல்ல நோக்கங்களுக்காகவும் செலவு செய்யவும் முடிவு செய்துள்ளேன்" என்றார்.
கையில் எவ்வளவு கிடைக்கும்?
முதல் பரிசு ரூ.10 கோடி என்றாலும் வரி பிடித்தம், ஏஜெண்ட் கமிஷன் போக ரூ.6.2 கோடி பரிசாக கிடைக்கும். முதல் பரிசு வென்ற பலரும் சமீப காலமாக தங்கள் அடையாளத்தை காட்ட விரும்புவது இல்லை. சொந்தக்காரர்களிடம் இருந்து தேவையற்ற அன்புத்தொல்லைகள், மற்றும் பணத்தில் பங்கு கேட்பார்கள் என்று பயந்து பலரும் அடையாளத்தை வெளிப்படுத்த மறுக்கும் நிலையில், பத்மநாபன் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். வின்னிங் டிக்கெட்டை தனது ஊருக்கு அருகில் உள்ள ஸ்டேட் வங்கியில் பத்மநாபன் சமர்பித்துள்ளார். தேவையான நடைமுறைகளுக்கு பிறகு பத்மநாபன் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications