Kerala Lottery: கேரள லாட்டரிகளை கொண்டு வந்த சுற்றுலாப் பயணிகள்.. எல்லையில் அதிரடி காட்டிய தமிழக போலீஸ்!
திருவனந்தபுரம்: தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டிற்கு தடை இருந்தாலும் கேரளாவில் லாட்டரி (Kerala Lottery Ticket) விற்பனைக்கு அனுமதி உள்ளது. இதனால், கேரளாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிலர், வரும் போது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. ஆனால், இப்படி டிக்கெட்டுகள் வாங்கி வருவதால் சட்டரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ள சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ள வேண்டிய சூழலும் உள்ளது.
அப்படியான ஒரு நிகழ்வுதான், கேரள - தமிழக எல்லையில் அண்மையில் நடைபெற்றுள்ளது. கேரளாவில் இருந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு என்ன நடந்தது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கேரள லாட்டரி டிக்கெட்
லாட்டரி சீட்டுக்கும் பலரும் அடிமையாகி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லாட்டரியில் விட்டதால், தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசு தடை விதித்தது. இதன்படி, தமிழகத்தில் லாட்டரிகளை விற்பனை செய்வது சட்டவிரோதச் செயல் ஆகும்.
எனினும், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி டிக்கெட் விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இதுபோல, வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக பல கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, தற்போது ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. முதல் பரிசு அடித்தால் வாழ்நாளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு திருப்பம் ஏற்பட்டு விடும் என்ற ஆசையில் பலரும் லாட்டரிகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. கேரளாவில் டீக்கடை இருக்கிறதோ இல்லையோ, லாட்டரி கடைகளை திரும்பிய திசையெல்லாம் பார்க்க முடியும்.
தமிழகத்திற்குள் அனுமதி கிடையாது
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நீங்கள் பஸ்சிலோ, காரிலோ சென்றால், கேரளா எல்லை வந்துவிட்டோம் என்பதை லாட்டரி கடையை வைத்து தான் கண்டறிய முடியும். அந்த அளவிற்கு கேரளாவில் லாட்டரிகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. கேரளா-தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள கடைகளிலும், தமிழகத்தில் இருந்து செல்லும் மக்கள் வரும் போது லாட்டரியை வாங்கி வருவதை பார்க்க முடியும்.
சில நேரங்களில் இப்படி வாங்கும் டிக்கெட்டிற்கு பரிசுத் தொகையும் அடித்து விடுகிறது. இதனால், பார்டர் பகுதிகளில் உள்ள லாட்டரி கடைகளில் டிக்கெட் விற்பனை களை கட்டுவதை பார்க்க முடிகிறது. அதேவேளையில், தமிழகத்தில் லாட்டரிகளுக்கு தடை இருப்பதால், அதை தமிழகத்திற்குள் அனுமதி கிடையாது. தமிழக பகுதிகளில் விற்பனை செய்தால் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
கிழித்து போட சொன்ன போலீசார்
இந்த நிலையில்தான், கேரளாவில் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்த சுற்றுலாப் பயணிகள் எல்லையில் வசமாக போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அதாவது, வயநாடு மாவட்டம் அமபலவயல் அருகே உள்ள செலாடி பகுதி, தமிழக - கேரளா எல்லைப் பகுதி ஆகும். இங்குள்ள தமிழக போலீசாரின் சோதனை சாவடியில், கேரளாவிலிருந்து வந்த வாகனத்தை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது காரில் இருந்த சுற்றுலாப் பயணிகளிடம் மூன்று பேரிடம் லாட்டரி டிக்கெட் இருந்துள்ளது. இதையடுத்து, லாட்டரி டிக்கெட்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும், கைது மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமன்றி, லாட்டரி டிக்கெட்டுடன் தமிழகத்திற்கு செல்ல அனுமதிக்க முடியாது எனவும், தங்கள் கண்முன்னே கிழித்து போட்டுவிட்டு செல்லுமாறும் கூறியுள்ளனர்.
வெறும் கையுடன் அனுப்பி வைத்தனர்
இதனால், போலீசாருடன் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதம் செய்த நிலையில், லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.100 அபராதம் என ரூ.300 அபராதம் செலுத்த சொன்ன போலீசார், டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து வெறும் கையுடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications