விற்காத லாட்டரி டிக்கெட்டால் தலைவிதியே மாறிடுச்சே.. சோகத்தில் இருந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் விற்காத லாட்டரி டிக்கெட் மூலம் லாட்டரி கடைக்காரர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். கடையில் விற்பனையாகாமல் இருந்த லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.இதனால், சோகத்தில் இருந்த அவர் தற்போது எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோக கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விஷு, ஓணம், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது.

அண்மையில் நடந்த ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ரூ.25 கோடி ரூபாய் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கிடைத்தது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் விழுந்துள்ளதால் பரிசு விழுந்த லாட்டரியை கேரளாவுக்கு வந்த போதுதான் அவர்கள் வங்கினார்களா என்பதை உறுதி செய்த பிறகே பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் இதற்காக குழு ஒன்றையும் கேரல லாட்டரி துறை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
பம்பர் குலுக்கல் மட்டும் இன்றி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை Fifty-Fifty FF லாட்டரியும் கேரளாவில் பிரபலமான லாட்டரியில் ஒன்றாகும். இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். வாரம் தோறும் இதற்கான குலுக்கல் நடைபெற்று அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நிலையில் தான், கேரளாவில் கடந்த வாரம் நடைபெற்ற குலுக்கலில் லாட்டரி ஏஜெண்ட் ஒருவருக்கே பரிசுத்தொகை அடித்துள்ளது.
கடையில் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள அதோலி என்ற ஊரை சேர்ந்தவர் என்.கே கங்காதாரன். லாட்டரி ஏஜெண்டாக உள்ள இவர் தனது கடையில் மொத்தமாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி சில்லறையில் விற்பனை செய்து வருகிறார். 33 ஆண்டுகளாக பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய கங்காதரன், தற்போது லாட்டரி கடையை நடத்தி வருகிறார்.
4 ஆண்டுகளாக லாட்டரி கடையை நடத்தி வரும் இவருக்கு இதுவரை ஒரு முறை கூட பரிசுத்தொகை அடித்தது இல்லையாம். இந்த நிலையில், தனது கடையில் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. லாட்டரி சீட்டு விற்காமல் இருந்ததால் வருத்ததத்தில் இருந்த கங்காதாரனுக்கு அந்த சீட்டு மூலமே பரிசுத்தொகை கொட்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் கங்காதாரன்.
இது மட்டும் இல்லை.. அவரது கடையில் விற்ற டிக்கெட் மூலமாக 6 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அடித்துள்ளது. இது குறித்து கங்காதரன் கூறுகையில், லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்ததது புதன்கிழமை மாலையே எனக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் பாதுகாப்பு இல்லை என்பதால் யாருக்கும் சொல்லவில்லை. மறுநாள் எனது ஊரில் உள்ள வங்கியில் லாட்டரியை டெபாசிட் செய்தேன்" என்றார்.
எது எப்படியோ, விற்காத லாட்டரியால் தற்போது ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. இதைத்தான் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்து கூட கொடுக்கும்... என்று சொல்வார்கள் போல... பல கேரள சேட்டன்களும் கங்காதாரனுக்கு பரிசு விழுந்ததை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications