Fish Curry: மாந்திரீகத்தில் வெறி! கொதிக்க கொதிக்க மீன் குழம்பை மனைவி மீது ஊற்றிய கணவர் மீது வழக்கு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லத்தில் பேய் பிடித்திருப்பதாக கூறி மனைவி மீது சுடச் சுட மீன் குழம்பை ஊற்றிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக கருதி தாக்கினாராம். இது குறித்து ரெஜிலா, போலீஸில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் சஜீத்தை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

சஜீத்திற்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை அதிகம் என தெரிகிறது. இதனால் அவ்வப்போது மாந்திரீகரின் பேச்சை கேட்டுக் கொண்டு தனது மனைவியை சஜீத் துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அடுத்தடுத்து ரெஜிலா காவல் நிலையத்திற்கு வருவதும், சஜீத்தை போலீஸார் எச்சரிப்பதுமாக இருந்ததாம். ஆனாலும் சஜீத் அடங்கவில்லை. தனது மனைவி பேய் பிடித்திருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்பினாராம்.
இதனால் தனது கிராமத்தில் உள்ள மாந்திரீகர்களை சஜீத் சந்தித்து பேய் விரட்டுவது எப்படி என கேட்டு அவர்களிடம் பயிற்சியையும் எடுத்துக் கொண்டு வந்தாராம். அந்த வகையில் அண்மையில் கூட ஒரு மந்திரவாதியை அவர் சந்தித்தாராம். அப்போது ரெஜிலாவுக்கு சில சடங்குகளை செய்யுமாறு அந்த மந்திரவாதி கூறினாராம்.
அந்த வகையில் சம்பவத்தன்று சடங்கு செய்வதாக கூறி ரெஜிலாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த சஜீத் அவரது உடம்பெல்லாம் சாம்பல் பூசினாராம். பின்னர் மாந்திரீக கயிறுகளை கட்டி பேய் ஓட்ட மந்திரங்களையும் சஜீத் சொன்னாராம்.
இதையெல்லாம் பார்த்து அலறிய ரெஜிலா, இந்த சடங்குகளை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தாராம். இதனால் சஜீத் ஆத்திரமடைந்து ரெஜிலாவை கடுமையாக தாக்கினாராம். அப்போது அங்கு வந்த அவரது மகன் தனது தந்தையை தடுத்துள்ளார். இதனால் அவரையும் சஜீத் தாக்கினாராம்.
அப்படியும் ஆத்திரம் அடங்காத சஜீத், நேராக சமையல் அறைக்கு ஓடினார். அங்கு அடுப்பில் சுடச்சுட மீன் குழம்பு இருந்ததாம். அதை கொண்டு வந்து ரெஜிலா முகத்தில் ஊற்றினாராம். சூடு தாங்காமல் ரெஜிலா அலறி துடித்தாராம்.
இந்த அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் ஓடி வந்து ரெஜிலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே இந்த சம்பவத்தால் அஞ்சிய சஜீத், தலைமறைவாகிவிட்டாராம். ரெஜிலா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சஜீத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications