கேரளா அபயா கொலை வழக்கு: பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனை
திருவனந்தபுரம்: கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம்.
1992-ம் ஆண்டு கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா செயின் பயஸ் கான்வென்ட் கிணறில் சடலமாக மீட்கப்பட்டார். கேரளாவில் அபயா மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே விசாரணை அறிக்கைகள் தெரிவித்தன. பின்னர் அபயா கொலை செய்யபப்ட்டது உறுதியானது.
பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் ஆகியோர் கன்னியாஸ்திரி செபியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்ததால் அபயா படுகொலை செய்யப்பட்டதும் அம்பலமானது.
இந்த வழக்கில் இருந்து பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார். 28 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே. சனில்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
இதனிடையே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கே. சனில்குமார் உத்தரவிட்டார்.