அப்பதான் "அது" ஞாபகம் வந்தது.. ரயிலுக்கு தீ வெச்சிட்டேன்.. ஷாருக் "அதிர்ச்சி" தகவல்.. உறைந்த போலீஸ்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர் தந்த வாக்குமூலத்தை கேட்டு, ஒட்டுமொத்த போலீசாரும் அதிர்ந்து போயுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 2-ம் தேதி இரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதில் டி-1 என்ற கோச் பெட்டியில், பயணி ஒருவர் திடீரென சக பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
இதை பார்த்து பதறிப்போன பயணிகள், அலறி துடித்தனர். அவர்களின் உடம்பெல்லாம் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.. என்ன செய்வதென்றே தெரியாமல் உடலில் பரவிய தீயுடன், ரயிலில் இருந்து வெளியே குதித்தனர். சிலர் ரயிலுக்குள்ளேயே தெறித்து ஓடினார்கள்..

மணிபர்ஸ்
தண்டவாளத்தில் குதித்ததில், ஒரு வயது குழந்தை, ஒரு பெண் உட்பட 3 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கேரள போலீஸார் உடனடி விசாரணையில் இறங்கினர்.. அப்போது, ஒரு பை-யை தண்டவாளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.. அதில், பெட்ரோல் அடங்கிய பாட்டில், ஊர் பெயர்களின் குறிப்பு, ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்ட டைரி, இயர்போனின் கவர், 2 மொபைல் போன்கள், சாப்பாடு நிரப்பப்பட்ட டிபன் பாக்ஸ், மணிபர்ஸ், டி-சர்ட், போன்றவையும் கண்டெடுக்கப்பட்டதாகவும், இவை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டன.
சங்கேத மொழிகள்
திருவனந்தபுரம், கோவளம், குளச்சல், கன்னியாகுமரி போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டன.. அத்துடன், கேரளாவில் உள்ள முக்கிய இடங்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருந்தன. மேலும், செல்போன்களுக்கு சில சங்கேத மொழிகளில் எஸ்எஸ்எஸ்களும் வந்திருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். எனவே, ஒருவேளை இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீஸார், தேசிய புலனாய்வு முகமைக்கும் (என்ஐஏ) தகவல் அளித்தனர். அப்போதுதான், அந்த செல்போன்களுக்கு மகாராஷ்ட்ராவில் இருந்துதான் அதிக அழைப்புகள் வந்திருந்ததும் தெரியவந்தது.

கோணங்கள்
இதன்பேரில், என்ஐஏ - கேரள போலீஸார் அடங்கிய தனிப்படை, மகாராஷ்டிரா போலீஸார் உதவியுடன் அங்குள்ள ரத்னகிரியில் பதுங்கியிருந்த ஷாருக் சைஃபி என்பவரை கைது செய்தனர்.. ஷாருக்குக்கு 32 வயதாகிறது.. பின்னர் அவரிடம் கேரள போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரணையை துவங்கினர். அதுமட்டுமல்லாமல், இவர் ஒரு ஐஎஸ் தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் என்ஐஏ சந்தேகிக்கிறது.. காரணம், போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஒரு குண்டுவெடிப்புக்கும், இப்போது கேரள ரயில் பயணிகள் எரிப்பு சம்பவத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறதாம்.. அதனால், அந்த கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஞாபகம் வந்தது
இந்நிலையில், போலீசாரிடம் ஷாருக் வாக்குமூலம் ஒன்று தந்துள்ளார்.. அந்த வாக்குமூலத்தில், அவர் சொன்ன விஷயங்களை கேட்டு போலீசாரே அதிர்ந்து போய்விட்டனர்.. அதில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மும்பைக்கு என்னுடைய நண்பருடன் சென்றேன்.. அப்போது வழியில் ஒரு நபரை சந்தித்தேன்.. அந்த நபர்தான், ரயிலுக்கு தீ வைத்தால், நல்லது நடக்கும் என்றார்.. ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்லது நடக்கும் என்று அவர் திரும்ப திரும்ப என்கிட்ட சொல்லி கொண்டே வந்தார்..

அதற்கு பிறகு அந்த விஷயத்தையே மறந்துவிட்டேன்.. அன்னைக்கு கோழிக்கோடுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன்.. அப்போதுதான், அந்த நபர் சொன்னது எனக்கு திடீரென ஞாபகத்துக்கு வந்தது.. உடனே அந்த ரயிலில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கிவிட்டேன்.. அங்கிருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கினேன்... பிறகு, அடுத்த வந்த ரயிலில் ஏறிக் கொண்டேன்.. அங்கிருந்த பயணிகள் மீது அந்த பெட்ரோலை ஊற்றிவிட்டு, லைட்டரால் தீ வைத்து கொளுத்தினேன்..
இதற்கு பிறகு, அதே ரயிலில் வேறு ஒரு பெட்டிக்கு சென்று, எதுவுமே தெரியாதது போல பேசாமல் படுத்துக் கொண்டேன்... கண்ணூர் வந்ததும் அங்கு இறங்கி மகாராஷ்ட்ராவுக்கு சென்றுவிட்டேன். ரத்னகிரி என்ற இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றேன்.. அப்போது கீழே விழுந்துவிட்டேன். காயமும் ஏற்பட்டது... அப்போது, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. அங்கு சிகிச்சை பெற்று வந்தபோதுதான், போலீஸாரிடம் பிடிபட்டேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications