நர்ஸ் உடையில் பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்.. குழந்தையை மீட்ட போலீஸ்.. விசாரணையில் திடுக் தகவல்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் காதலனை மிரட்டுவதற்காக பெண் ஒருவர் குழந்தையை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் வண்டிப்பெரியார், வலியத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அஸ்வதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அவரை உறவினர்கள் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
3 நாட்களுக்கு முன்பு அஸ்வதிக்கு குழந்தை பிறந்தது. பிரசவ வார்ட்டில் இருந்த அஸ்வதியிடம் நேற்று மாலை நர்ஸ் உடையில் வந்த பெண் ஒருவர் , குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என கூறி அஸ்வதியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்றார்.

தாய் அதிர்ச்சி
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பாததால் அஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு பணியிலிருந்த மருத்துவரிடம் அஸ்வதி கேட்டார். அப்போது மருத்துவர்கள் அது போல் குழந்தையை பரிசோதனை செய்ய எந்த செவிலியரையும் தாங்கள் அனுப்பவில்லை என பதில் அளித்தனர். இதனால் அஸ்வதிக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.

கேரளாவில் குழந்தை கடத்தல்
அப்போதுதான் தனது குழந்தையை யாரோ கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தார். இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டர் மனீஷ் தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
அப்போது ஒரு பெண், குழந்தையுடன் வெளியே செல்வது அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அந்த பெண்ணை பிடிக்க முயற்சித்தனர். அப்போதுதான் நீத்து அங்கிருந்த ஆட்டோ டிரைவரை தான் தங்கியிருந்த விடுதிக்கு வருமாறு கூறி வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றுள்ளார். அதே நேரத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் விஷயத்தையும் ஆட்டோ டிரைவர் அறிந்திருந்தார். ரிதுவை பார்த்த போது ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த அவர் அவர்கள் வரும் வரை ஒரு கடையில் ஏதோ வாங்குவது போல் டிரைவர் நடித்துள்ளார். உடனே அந்த இடத்திற்கு வந்த போலீஸார் நீதுவை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

2 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்
கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் எர்ணாகுளம் களமசேரியை சேர்ந்த நீதுராஜ் (33) என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் குழந்தையை நீது ராஜ் கடத்தியது குறித்து விசாரித்தனர்.

தனிமையில் சந்தித்த ஜோடி
அப்போது அவர் கூறுகையில் நீது ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணம் என ரூ 30 லட்சம் வரை இப்ராஹிம் பெற்றுள்ளார். இந்த நிலையில் நீது ராஜை கைவிட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இப்ராஹிம் முயற்சித்ததாக தெரிகிறது.

இப்ராஹிமை மிரட்ட குழந்தை கடத்தல்
இதையறிந்த நீது ராஜ், இப்ராஹிமிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மன்றாடி கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் இப்ராஹிமை தனது வழிக்கு கொண்டு வர குழந்தையை கடத்தி அதை வைத்து மிரட்ட முடிவு செய்தார் நீது. இதற்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு நர்ஸ் வேடத்தில் சென்று குழந்தையை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணும் இப்ராஹிமும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications