பேஸ்புக்கில் பிராங்க் காதல்.. பிறந்த குழந்தையை கொன்ற தாய்.. பிராங்க் செய்த உறவினர்களும் தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் பிராங்க் காதலால் பெற்ற குழந்தை கொன்று ரப்பர் தோட்டத்தில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிராங்க் செய்த இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
சமூகவலைதளங்களில் சீக்கிரம் பிரபலமாகி கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பலர் பிராங்க் ஷோக்களை நடத்தி வருகிறார்கள். இது போன்று மேலை நாடுகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாக அவரது உறவுக்கார பெண்களே பிராங்க் செய்ததை அறியாமல் அந்த பெண் தனது குழந்தையை கொன்று வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம்
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு வயது 24. இவரது கணவர் விஷ்ணு, வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் ரேஷ்மா மீண்டும் கருவுற்றிருந்தார்.

கணவரிடம் செய்தி
அந்த செய்தியை தனது கணவரிடம் சொல்ல தயாரான போது முகநூலில் ஆனந்த் என்ற பெயரில் பிரெண்ட் ரிக்வஸ்ட் கிடைத்தது. இதையடுத்து சிறிது காலத்தில் அந்த ஆனந்த் மீது ரேஷ்மாவுக்கு காதல் ஏற்பட்டது. அப்போது ஆனந்திடம் தனக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருப்பதாகவும், தற்போது கருவுற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரேஷ்மா.

போலி ஐடி காதல்
இந்த ஆனந்த் என்ற ஐடி போலியாக ரேஷ்மாவின் உறவுக்கார பெண்ணால் உருவாக்கப்பட்டதை அறியாமல் காதல் வலையில் சிக்கினார் ரேஷ்மா. இந்த நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் தான் ஏற்றுக் கொள்வதாக ரேஷ்மாவிடம் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

ரேஷ்மா கர்ப்பம்
இதனால் தான் கருவுற்றிருப்பதை கணவருக்கும் குடும்பத்தாருக்கும் ரேஷ்மா சொல்லவில்லை. இதனிடையே விஷ்ணுவும் மீண்டும் வளைகுடா நாட்டிற்கு சென்றார். இந்த நிலையில் வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ரேஷ்மா. பின்னர் குழந்தையை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் வீசியுள்ளார்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து தகவலறிந்த போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் குழந்தையின் தாயை கண்டுபிடிக்க ரப்பர் தோட்டத்தை சுற்றியிருக்கும் பெண்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தியதில் ரேஷ்மா என கண்டறியப்பட்டது.

ரேஷ்மா போலீஸாரிடம் வாக்குமூலம்
அவரிடம் விசாரணை நடத்தியதில் பேஸ்புக் காதல் குறித்த விவகாரங்களை ரேஷ்மா போலீஸாரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் முகநூலில் ரேஷ்மாவிடம் பேசியது அவரது உறவினர் ஆர்யாவும் கரீஷ்மாவும் என தெரியவந்தது. இந்த நிலையில் போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்த இருவரும் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பிராங்க் செய்வதற்காக தொடங்கிய இந்த விவகாரம் தற்போது 3 பேரின் உயிர் பலி வாங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications