கேரளாவின் முதல் ‘கே’ தம்பதி; குடும்ப வாழ்க்கைக்கு 6 வயது! ட்ரெண்டாகும் வீடியோ
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முதல் ஒருபால் ஈர்ப்பு ஜோடியான நிகேஷ் & சோனு ஆகிய இருவரும் தங்களின் இல்வாழ்க்கையில் 6வது ஆண்டை நிறைவுசெய்துள்ளதாக வீடியோ போட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு திரிசூரத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் நிகேஷுக்கும் சோனுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்தச் செய்தி ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த இருவரும் தங்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரைப் போய் உரிமை கோரினர். நிகேஷ் புஷ்கரன் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்.

இவருக்கு 38 வயதாகிறது. சோனு ஒரு தொழில்நுட்ப கலைஞர். இவருக்கு 34 வயதாகிறது. இவர்கள் இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்கள். அதை வெளிப்படையாகத் தெரிவித்து திருமணம் செய்து கொண்டதுடன் யூடியூப்பில் விலாக் மூலம் தங்களின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் ஒரு தரப்பினர் இந்த ஜோடியை ட்ரோல் செய்துவருகின்றனர். இன்னொரு பக்கம் பலர் இவர்களை ஆதரித்தும் வருகிறனர். இந்த ஜோடி வெளியிடும் காணொளிகள் ஒரு லட்சம், 2 லட்சம் என வியூஸ் வரைப் போகின்றன. ஒருபால் திருமணத்தை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும் என்று முதல் மனுவை 2020இல் கேரள உயர் நீதிமன்றத்தில் இவர்கள் முன்வைத்தனர். அதனால் ஊடகங்களில் இவர்கள் வெளிச்சம் பெற்றனர்.
நிகேஷுக்கு 2 அக்காக்கள் உள்ளனர். இவர்தான் வீட்டில் கடைக்குட்டி. இவரது வீட்டில் முழு ஆதரவு இந்த ஜோடிக்குக் கிடைத்துள்ளது. "பாலியல் விருப்பம் சார்ந்தது அல்ல. அது முற்றிலும் உயிரியல் ரீதியான இயற்கையானது" என்கிறார் இவர். LGBTQ சரியான புள்ளிவிவரங்கள் இந்தியாவில் இல்லை. ஆனால் 3 முதல் 5% பேர் இருப்போம் என்கிறார்.

"எங்கள் மனவலியை அனுபவித்தால் மட்டுமே எங்கள் உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்" என்கிறார் சோனு. இந்த ஜோடி பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிறது. இவர்கள் மீது இணையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் இருவரும் மனம் உடைந்துபோயினர். சட்டப்பிரிவு 377 குற்றம் இல்லை என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இவர்கள் சுதந்திரமாக நடமாட முடிந்துள்ளது. உறவுகளும் நண்பர்களும் ஆதரவைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
"நாங்கள் உடலுறவு கொள்வதற்கான சுதந்திரத்தை மட்டும் விரும்பவில்லை. ஒருபால் ஈர்ப்பாளர்களின் உரிமைகளைப் பெற நாங்கள் விரும்புகிறோம்" என்று இருவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றனர். "நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், சோனு ஒப்புதல் ஆவணத்தில் கையெழுத்துப்போட முடியாது. என் பெற்றோர்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால், இயல்பான திருமண முறை என்றால் மனைவியின் கையெழுத்துதான் செல்லுபடியாகும்" என்கிறார் நிகேஷ்.
கால் சென்டரில் ஒன்றில் வேலை பார்த்து வரும் சோனு. "நாங்கள் திருமண உறவிலிருந்தாலும், பல்வேறு அரசுப் படிவங்களில் 'சிங்கிள்' என்றே டிக் செய்ய வேண்டி உள்ளது. எங்கள் வங்கிக் கணக்குகளில் அல்லது காப்பீட்டு ஆவணங்களில் நாமினி என்று நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கையெழுத்திட முடியாது. இந்த நிலை நியாயமானதல்ல" என்கிறார்.
"எல்ஜிபிடிக்யூஏ சமூகத்தினர் கொடி வானவில் உள்ள பல வண்ணங்களை உள்ளது. அந்த வண்ணங்கள் பல்வேறு வகையான மனிதர்களைக் குறிக்கின்றன. வாழ்க்கை வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டது. அந்த வண்ணங்கள் அனைத்தும் சேர்ந்துதான் நம்மை அழகாகக் காட்டுகின்றன இல்லையா?"எனக் கேட்கிறார் நிகேஷ்.
ஆரம்பத்தில் பெற்றோரைச் சமாதானப்படுத்துவதில் பல சிரமங்களைச் சந்தித்த இந்தத் தம்பதிக்கு இப்போது குடும்பத்தின் நல்ல ஆதரவு உள்ளது. "நாங்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஒன்றாக வாழ விரும்புகிறோம். மறுபிறவி எடுத்தால், நாங்கள் மீண்டும் இணைந்து வாழவே விரும்புகிறோம்" என்றது இந்தத் தம்பதி.












Click it and Unblock the Notifications