அவதூறு வீடியோவை நீக்கச் சொல்லி யூடியூபருக்கு மிரட்டல்.. வீட்டை சூறையாடியதாக பிரபல நடிகருக்கு சம்மன்
திருவனந்தபுரம்: வீடியோக்களை நீக்கச் சொல்லி யூடியூபரை மிரட்டியதாக பிரபல நடிகருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் அவரது 3 தம்பிகளில் ஒரு தம்பியாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் நிஜத்தில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். கடந்த 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற படத்தின் மூலம் பாலா தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாடகி அம்ருதாவை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பாலா விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அது போல் பாலா, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஆயினும் இவருக்கு தமிழில் வரவேற்பு இல்லை. இதனால் அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பாலாவுக்கு கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்வதில் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தார். மற்றபடி பாலா நலமாக இருப்பதாகவும் அவரது மனைவி எலிசபெத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாலா தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேரளாவில் பிரபல யூடியூபரான சந்தோஷ் வர்கி, திரைப்படங்கள் வெளியானதும் முதல் காட்சி குறித்து விமர்சிப்பார். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகைகள், நடிகர்கள் குறித்தும் அவர் அவதூறாக பேசியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மோகன்லால் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார் வர்கி. அது போல் பிரபல நடிகை குறித்தும் அவர் ஆபாசமாக பேசியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் பாலா, சந்தோஷ் வர்கியை தனது வீட்டிற்கு வரவழைத்து நடிகர்,நடிகைகள் குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள், நீங்கள் நேரில் பார்த்தீர்களா, என கேள்வி எழுப்பினார்,
படங்களை நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்றார். இதை சந்தோஷ் வர்கியும் ஏற்றுக் கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதை பாலா வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதற்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் பாலா தொடர்பான ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை செகுதான் என்ற பெயரில் அலெக்ஸ் என்ற யூடியூபர் வெளியிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவரையும் அவரது நண்பர் முகமது அப்துல் காதரையும் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்த பாலா அவர்களை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக முகமது அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.
சில வீடியோக்களை நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகர் பாலா மிரட்டியதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் புகார்தாரர்களின் வீட்டையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுதது பாலா உள்பட 3 பேர் மீது திரிக்காகரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் யூடியூபரின் குற்றச்சாட்டை பாலா மறுத்துள்ளார். மேலும் பாலாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications