Liquor price: மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்! தமிழ்நாடு பாணியில் கேரளா.. சூழலியலை காக்க தீவிர முயற்சி
திருவனந்தபுரம்: காலி மது பாட்டில்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில், தமிழகத்தில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும்போது அந்த கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதே பாணியை தற்போது கேரளாவும் கடைபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு குறையும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை காட்டு பகுதியில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மது பாட்டில்களுக்கு ரூ.10 வீதம் அதிகமாக வைத்து விற்பனை செய்ய வேண்டும், பாட்டில் திரும்ப ஒப்படைக்கும்பட்சத்தில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

தமிழ்நாடு முன்னோடி
இந்த முயற்சி நீலகிரி மாவட்டத்தில் முதலில் அமல்படுத்தி பார்க்கப்பட்டது. சோதனை முயற்சி நல்ல பலனை கொடுத்த நிலையில் பல மாவட்டங்களில் இந்த திட்டம் அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் சூழலியல் பிரச்சனை மேலெழுந்திருக்கிறது. அங்கும் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளா ஆர்வம்
அதாவது, கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில், கேரள மாநில மது விற்பனை நிலையங்களில் விற்கப்படும் மதுபான பாட்டில்களுக்கு புதிய திரும்பப் பெறும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் சோதனை முயற்சியில் தொடங்குகிறது. இதன்படி, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.20 வசூலிக்கப்படும்.
கூடுதல் கட்டணம்
இந்த கட்டணம் பாட்டில்களை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் திரும்ப ஒப்படைக்கும் போது திரும்ப வழங்கப்படும் என மாநில கலால் துறை தெரிவித்துள்ளது. கலால் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கூறுகையில், இந்த ரூ.20 ஒரு கூடுதல் கட்டணம் அல்ல, மாறாக பொறுப்பான நுகர்வை ஊக்குவிக்கும் ஒரு முதலீடு என்றார். ஒவ்வொரு பாட்டிலிலும் பணம் திரும்பப் பெற வசதியாக ஒரு QR ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
அச்சுறுத்தும் பிளாஸ்டிக்
கேரளாவில் ஆண்டுக்கு சுமார் 70 கோடி மதுபான பாட்டில்கள் விற்பனையாகின்றன. இதில் 80 சதவீதம் பிளாஸ்டிக் பாட்டில்களாகும். "இது தெருக்களில் வீசப்படும் பாட்டில்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும்" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ரூ.800-க்கு மேல் விலை கொண்ட அனைத்து மதுபானங்களும் இனி கண்ணாடி பாட்டில்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் துறை முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம், கிளீன் கேரளா நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படுகிறது. இது திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் முதலில் செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவுக்கு சிக்கல்
கேரளா இயல்பாகவே நீண்ட கடற்கரை கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் ஏராளமான நீர் நிலைகளையும் கொண்டிருக்கிறது. இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக்கை உணவு என நினைத்து மீன்களும், ஆமைகளும் சாப்பிட்டு விடுகிறது. அல்லது பிளாஸ்டிக் பொருட்களில் சிக்கிக்கொள்கிறது. இது மீன்பிடி தொழிலை பாதிக்கிறது.
மறுபுறம் நகர்ப்புற பகுதிகளில் மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக் கொள்வதால் மழைக்காலங்களில் நீ்ர் வடியாமல் வெள்ளம் ஏற்படுகிறது. எனவே கேரளாவில் பிளாஸ்டிக் பெரும் பிரச்சனையாக உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications