உனக்கு 65-எனக்கு 55.. முதுமையில் மலர்ந்த உணர்வுபூர்வமான காதல் கதை.. நெகிழ வைத்த முடிவு
திருவனந்தபுரம்: ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு திருமணம் அல்லது மறுமணம் செய்து கொள்வதற்கும், தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்வு செய்தற்கும், இன்னும் இந்த சமூகத்தில் தயக்கம் இருக்கிறது. வெறும் காமம் சார்ந்த விஷயமாக பார்க்காமல், தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் உரிமை ஆகியவை முதியவர்களுக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் திருமணம் கேரளாவில் நடந்துள்ளது. முதுமையில் மலர்ந்த காதலை தொடர்ந்து 65 வயது தொழிலாளிக்கு 55 வயது பெண்ணுடன் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது
திருமணம் என்பது 40 வயதிற்குள் நடந்தால் ஓரளவு இந்த சமூகம் ஏற்கிறது. 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் திருமணம் செய்வது அதிகமாக நடக்கும். அதேநேரம் இன்றைய சூழலில் 30 வயதை கடந்த ஆண் திருமணத்திற்கு பெண் தேடி கிடைப்பது என்பது சவாலாக உள்ளது. அந்த டாபிக் பற்றி தேவையில்லை.. ஆனால் அப்படியான சூழலில் 50 வயதை கடந்தவர்கள், 60 வயதை கடந்தவர்கள் திருமணம் செய்வது என்பது மிகவும் முற்போக்கான விஷயமாக சமூகத்தில் பார்க்கப்படுகிறது. வெறும் காமம் சார்ந்த விஷயமாக பார்க்காமல், ஒருவருக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்பது சமூகத்தில் காலம் காலமாக வரவேற்கப்படுகிறது. கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் களிதட்டுங்கல் பகுதியை சேர்ந்த 65 வயதாகும் ரமேசன், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவர், உறவு முறிந்து, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். சேர்த்தலா குருப்பம் குளங்கரை பகுதியை சேர்ந்த ஓமனாவும் (55) மணவாழ்க்கை முறிந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் ரமேசனுக்கும், ஓமனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த நிலையில் முதுமை வயதில் அவர்களுக்கிடையே திடீரென காதல் மலர்ந்துள்ளது.
தனிமையாக வசிக்கும் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணையலாம் என்று துணிந்து முடிவெடுத்தனர். தங்கள் உறவினர்களிடமும் தெரிவித்தனர். உறவினர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. வயதான காலத்தில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள் என சம்மதம் தெரிவித்தனர். பெயரளவுக்கு என்று இல்லாமல், ஊரறிய திருமணத்தை நடத்த மணவீட்டார் முடிவு செய்தனர்.
இந்நிலையில் ரமேசன் எதிர்பாராத விதமாக கடந்த 15-ந் தேதி சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவருடைய இடது கால் தொடை மற்றும் முழங்காலுக்கு கீழ் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருமண ஏற்பாடு நடந்த நிலையில் ரமேசன் விபத்தில் சிக்கியதால், ஓமனாவுடன் நடக்க இருந்த திருமணத்தை தள்ளி வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டதால் ரமேசன் மற்றும் ஓமனா ஆகிய இருவரும் நிச்சயித்த நாளிலேயே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.
ஆனால் ரமேசன் மருத்துவ படுக்கையில் இருந்த போதிலும், நிச்சயம் செய்த நாளில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் ரமேசன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கட்டிலில் அமர வைக்கப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு மணப்பெண்ணான ஓமனா மணக்கோலத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புடை சூழ வந்தார்.
அங்கு உறவினர்கள் முன்னிலையில் ரமேசன், ஓமனாவின் கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். வயதான காலத்தில் காதலித்து கரம் பிடித்த இருவரையும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மலர் தூவி வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு மருத்துவமனைக்கு ரமேஷன் சிகிச்சைக்காக சென்றார். ஓமனா அவரை பார்த்துக் கொள்ள அவருடன் மருத்துவமனைக்கு சென்றார். இதை கேள்விப்பட்ட பலர் சமூக வலைதளங்களில் ஆச்சரியத்துடன் விவாதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications