‛ஹே எப்புட்றா’.. வெடி வெடித்து ஏடிஎம் இயந்திரம் தகர்ப்பு.. கொள்ளையனுக்கு நடந்த ட்விஸ்ட்! என்னாச்சு?
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ஒரேநாளில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நிலையில் கேரளாவில் முகமூடி கொள்ளையன் பட்டாசுகளை வெடித்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்து கொள்ளையடிக்க முயன்றார். இந்த வேளையில் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டதால் முகமூடி கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது அங்கு என்ன நடந்தது? எப்படி பணம் தப்பித்தது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்கும முனைப்பில் ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் நியமனம், சிசிடிவிகள் அவசியம் பொறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் கூட பல வங்கிகள் இதனை சரியாக பின்பற்றுவது இல்லை. இதனால் ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் கடந்த 12ம் தேதி இரவு தொடர்ச்சியாக நடந்த 4 ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவில் வித்தியாசமாக..
திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் வெளிமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கேரள மாநிலத்தில் வித்தியாசமான முறையில் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

பட்டாசுகளை வெடிக்க வைத்து
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னாகாட் பகுதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை வித்தியாசமான முறையில் உடைத்து அதிகாலையில் மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அதாவது ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை சுற்றி அனைத்து பகுதிகளிலும் பட்டாசுகளை வைத்து பற்ற வைத்துள்ளார். இந்த பட்டாசு ஒரே வேளையில் வெடித்து சிதறின.

எமர்ஜென்சி பெல் அடித்ததால்..
இந்த வேளையில் ஏடிஎம் இயந்திரம் உடைந்து இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கலாம் என நினைத்த கொள்ளையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் பட்டாசு வெடித்தவுடன் அங்கிருந்த எமர்ஜென்சி பெல் அடித்ததோடு வங்கியின் மேலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு செல்போனில் தகவல் சென்றது. இதனால் பயந்துபோன கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

முகமூடி அணிந்து வந்த நபர்
இதுபற்றி வங்கி மேனேஜர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 3 மணியளிவில் ப்ளூ சர்ட், கருப்பு பேண்ட் மற்றும் முகத்தில் முகமூடி அணிந்த மர்மநபர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து பட்டாசு வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. தற்போது அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
முன்னதாக கடந்த 12ம் தேதி தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து மர்ம கும்பல் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் ஆந்திரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில் கேரளாவில் இன்னும் கொள்ளை கும்பல் சிக்கவில்லை. இந்நிலையில் தான் கேரளா பாலக்காடு மாவட்டத்தில் பட்டாசு வெடிக்க வைத்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications