பத்தே நிமிடம் 500 டூவீலர் நாசம்.. ரயில் நிலையத்தில் பேரழிவு.. மிக மோசமான தீ விபத்து! திக்திக் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை மிக மோசமான ஒரு தீவிபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் டூவீலர் பார்கிங்கில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் 500+ வாகனங்கள் கருகின. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
நமது நாட்டில் பொதுவாகவே பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பார்கிங் மையங்கள் இருக்கும். இருப்பினும், அந்த பார்கிங் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை மிக மோசமான ஒரு தீவிபத்து ஏற்பட்டது.

கேரளா தீ விபத்து
அங்குள்ள டூவீலர் பார்கிங்கில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகின. இவ்வளவு பெரிய தீவிபத்தால் அங்குப் புகை சூழ்ந்தது. தீயணைப்பு வாகனங்கள் வர தாமதமானதாகவும் அதுவே தீவிபத்து மோசமாகக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தீவிபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. எலக்டிரிக் பிரச்சினை காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் அங்கு பார்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு டூவிலரில் ஏற்பட்ட தீ, அப்படியே பரவியதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதன் பிறகே தீவிபத்திற்கான காரணம் தெரிய வரும்.
500 வாகனங்கள் நாசம்
அங்கு ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடைக்கு அருகில் சுமார் 600 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், ஒரு மின்சார ஸ்கூட்டரில் இருந்து தீ தொடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தீ ஆரம்பித்தபோது அதை அணைக்க அங்குப் போதிய வசதிகள் இல்லையாம். அத்தோடு காற்றின் வேகமும் சேரவே தீ வேகமாகப் பரவியது. சில வாகனங்கள் வெடிக்கவும் ஆரம்பித்ததால் தீயணைப்புப் பணிகளைச் சிரமப்படுத்தின. பத்து நிமிடங்களுக்குள் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசமாயின. தீ விபத்தினால் மேற்கூரையும் இடிந்து நிலையில், அங்கு நிலைமை மோசமானது.
Thrissur, Kerala: A massive fire broke out at Thrissur Railway Station. The blaze originated in the bike parking area near the station’s rear entrance, destroying several motorcycles. Preliminary reports indicate that more than 600 bikes were parked in the affected area pic.twitter.com/XQoSURUtUB
— IANS (@ians_india) January 4, 2026
பாதுகாப்பு குறைபாடுகள்
தீயணைப்புத் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு குறைபாடுகள் அம்பலமாகின. பயிற்சி அற்ற ஊழியர்கள், போதுமான தீயணைப்பு உபகரணங்கள் இல்லாதது மற்றும் அவசர உதவி எண்கள் இல்லாதது போன்றவை முக்கிய குறைபாடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.. மாநகராட்சி அனுமதி இன்றி வாகன நிறுத்துமிடம் செயல்பட்டதாகத் துணை மேயர் இ. பிரசாத் கண்டித்தார். இது குறித்து மாநகராட்சி விரைவில் ரயில்வே நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது. நகரில் உள்ள பிற வாகன நிறுத்துமிடங்களும் ஆய்வு செய்யவும் வலியுறுத்தினார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க திருச்சூர் நகரக் காவல்துறை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறை தலைவர் ஆர். சந்திரசேகர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணைக்குப் பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், "மாநிலத்தில் உள்ள அனைத்து பார்கிங் மையங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
தீ எங்கிருந்து தொடங்கியது எனத் தெளிவாகத் தெரியவில்லை. சிலர் தண்டவாளப் பகுதியில் இருந்து தொடங்கியதாகக் கூறுகின்றனர். இது தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பார்கிங் பகுதிகளிலும் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்" என்றார். காலையிலேயே தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், போலீசார் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications