பழங்குடியினர் நலத்துறைக்கு.. உயர் வகுப்பினரை அமைச்சராக நியமிக்கணும்.. சர்ச்சை கிளப்பிய சுரேஷ் கோபி
திருவனந்தபுரம்: பழங்குடியினர் விவகாரங்கள் துறையை உயர் சாதியினர் கையாள வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுரேஷ் கோபி தனது பேச்சு குறித்து விளக்கமளித்தார்.
டெல்லியில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக உள்ள நிலையில், எதிர்க்கட்சியாக பாஜக களமிறங்குகிறது.

வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன, குறிப்பாக பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அங்குப் பிரச்சாரம் செய்தார்.
அமைச்சர் சுரேஷ் கோபி:
டெல்லியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நடிகரும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சரானால் மட்டுமே பழங்குடியினர் நலனில் உண்மையான முன்னேற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி தரணும்:
இது தொடர்பாக அவர் பேசுகையில், "பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சராக முடியும் என்பது நமது நாட்டின் சாபக்கேடு.. இத்துறைக்குப் பழங்குடியைச் சேராத ஒருவரை நியமிக்க வேண்டும். ஒரு பிராமணரோ அல்லது நாயுடுவோ இந்த துறைக்குப் பொறுப்பேற்கட்டும்.. அப்போது தான் இந்த துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். அதேபோல், பழங்குடியினத் தலைவர்களுக்கும் வேறு முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் நமது ஜனநாயகத்தில் நடக்க வேண்டும்.
பழங்குடியினர் விவகாரத் துறையை நான் கையாளக் கூட தயாராகவே இருக்கிறேன். இருப்பினும், இத்துறையை யாருக்கு ஒதுக்குவது என்பதில் சில விஷயங்கள் உள்ளன என்பதையும் நாம் மறந்துவிட முடியாது" என்றார்.
எதிர்ப்பு:
சுரேஷ் கோபியின் இந்தக் கருத்துகள் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இது மிகப் பெரிய விவகாரமாக வெடித்தது. கேரளா சிபிஐ மாநிலச் செயலாளர் பெனாய் விஸ்வம், சுரேஷ் கோகி சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கவே இதுபோல பேசுவதாகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வேறு பல தலைவர்களும் கூட சுரேஷ் கோபியின் கருத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
விளக்கம்:
இது பெரிய சர்ச்சையாக வெடித்த சூழலில், நடிகர் சுரேஷ் கோபி தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எனது கருத்தைப் பலரும் விமர்சித்துள்ளனர். இதை நான் வாபஸ் பெறுகிறேன். நான் யாரையும் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று முத்திரை குத்தவில்லை.. பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இப்படிச் சொன்னேன்" என்றார்












Click it and Unblock the Notifications