கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை.. வேகமாக நிரம்பும் முல்லை பெரியாறு அணை! உபரி நீர் திறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்திருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் 13 மதகுகளும் 1.5 மீ அளவுக்கு திறக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், மழை மேலும் தீவிரமடைந்தால் அணையிலிருந்து உப நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டால் அது தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் அணையில் இருந்து இரண்டு வழிகளில் நீர் வெளியேற்றப்படும். அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் போது தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீர் நேரடியாக வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால் தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பு குறைவு. மாறாக லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தியை இது அதிகரிக்கும். அதே நேரத்தில், தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு லேசான பாதிப்புகள் ஏற்படலாம்.
தற்போது தேனியில் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்திருப்பதற்கும், அணையின் நீர் திறப்பு ஒரு வகையில் காரணமாகும். ஆனால், தேனியில் பெய்த பருவமழையே நீர் தேக்கத்திற்கு பிரதான காரணம்.
மறுபுறம் கேரளா மாநிலம் வழியாவும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வல்லக்கடவு, வண்டிப்பெரியார், சப்பாத்து போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வட கேரளாவில் மிக பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கேரளாவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிருக்கிறது. இடுக்கியில் பெய்த கனமழை ஒரு உயிர் பலியையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளரம்குன்னு அருகே இரவு 11:45 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த 66 வயதான பரப்பள்ளில் தாமஸ் என்ற தங்கச்சன் உயிரிழந்தார். அனவிலாசத்தில் உள்ள தனது ஹோட்டலை மூடிவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெள்ளரம்குன்னு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராபின் கரக்கட்டு தெரிவித்துள்ளார். எனவே கேரளாவில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications