கார் மீது சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த சம்பவம்.. தேசிய குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் காரில் சாய்ந்த 6 வயது சிறுவனை அதன் உரிமையாளர் எட்டி உதைத்த சம்பவத்தை அடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளா மாநிலம் தலச்சேரி பகுதியில் நேற்று முன் தினம் மாலை நேரத்தில் சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் எங்கோ கடைக்குச் சென்றுவிட்டார்.
அப்போது அங்கே வந்த தெருவோரத்தில் வசிக்கும் சிறுவன் அந்த காரில் சாய்ந்துள்ளான். சிறிது நேரத்தில் காரை எடுப்பதற்காக உரிமையாளர் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார். காரை ஸ்டார்ட் செய்தார்.

சிறுவன்
அப்போது காரின் மீது சிறுவன் சாய்ந்திருந்ததை சைடு மிர்ரரின் மூலம் உரிமையாளர் பார்த்துவிட்டார். பொதுவாக இந்த சமயங்களில் "காரை எடுக்க வேண்டும், கொஞ்சம் விலகி நில்லுங்கள்" என்பதைத்தான் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த உரிமையாளரோ அதிர்ச்சி அளிக்கும் செயல்பாட்டில் இறங்கியுள்ளார்.

வேற இடம் இல்லையா
அந்த சிறுவனை சாய்ந்து நிற்க இடமே இல்லையா என கேட்டு உரிமையாளர் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் கண்கலங்க காரை விட்டு தள்ளி நின்றார். சிறுவனை கார் உரிமையாளர் எட்டி உதைத்ததை பார்த்த அப்பகுதிமக்கள் உடனே அவரிடம் வந்து தட்டி கேட்டுள்ளனர்.

புகார்
இதைத் தொடர்ந்து அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். கார் உரிமையாளர் சிறுவனை எட்டி உதைக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது தொடர்பாக அந்த உரிமையாளர் மீது புகாரும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேசிய குழந்தைகள் நல ஆணையம்
அந்த காரின் உரிமையாளரின் பெயர் ஷிஷாத். அவர் கண்ணனுரை சேர்ந்தவர். தாக்கப்பட்ட சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியின் 6 வயது மகன் கணேஷ் என்பது தெரியவந்தது. சிறுவனை எட்டி உதைத்தது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனிதத்தன்மை இல்லை
6 வயது சிறுவன் என்றும் பார்க்காமல் ஈவு ஈரக்கமற்ற செயலை செய்துள்ள உரிமையாளரை நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள். காரை எடுக்க வேண்டும், சற்று தள்ளி நில்லுப்பா என கூறுவதற்கு கூட பொறுமையும் மனிதத்தன்மையும் இல்லாமல் அந்த உரிமையாளர் நடந்து கொண்டது அதிர்ச்சியாக இருக்கிறது. கடவுளின் தேசமான கேரளாவில் நடந்த இத்தகைய கொடூர சம்பவத்தை பாஜகவினர் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் கடவுள் தேசத்தில் பினராயி விஜயன் ஆட்சியின் கீழ் இப்படி ஒரு நிலையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications