வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்... ஆதரித்துவிட்டு பல்டியடித்த பாஜக எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால்..!
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால் ஆதரித்துவிட்டு சிறிதுநேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி அரசியல் பல்டியடித்துள்ளார்.
புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவற்றுவதற்காக சிறப்பு கூட்டத்தொடரை 23-ம் தேதி கூட்ட ஆளுநர் முகமது ஆரிப் கானுக்கு அமைச்சரவை பரிந்துரைத்தது.
ஆனால் அதற்கு கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் அனுமதி தரவில்லை. இதையடுத்து ஆளுநர் செயலுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் இரண்டாவது முறையாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட அனுமதி வேண்டி அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

ஓ.ராஜகோபால்
இதையடுத்து அவர் அனுமதி வழங்கிய நிலையில் கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபாலும் ஆதரித்தார்.

பல்டி
இந்நிலையில் ஆதரவு தெரிவித்த சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை மாற்றி அரசியல் கட்சியினரை கிறுகிறுக்க வைத்தார். ஓ.ராஜகோபால் அரசியல் பல்டியால் அடித்ததோடு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை தாம் ஒரு போதும் எதிர்க்கவில்லை என்றும் விவசாயிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் எனவும் சர்டிஃபிகேட் கொடுத்தார்.

எதிரான தீர்மானம்
இதனிடையே புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு இயற்றிய இந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மறுப்பு
கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால் ஆதரித்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில், முதலில் அவரை கொண்டாடிய நெட்டிசன்கள் பின்னர் அவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து விமர்சிக்கத் தொடங்கினர்.












Click it and Unblock the Notifications