"ஏதோ தப்பா இருக்கு!" கேரளாவில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் வீராங்கனைகள் தற்கொலை! மாஜி ஒலிம்பிக் வீரர் பகீர்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதியில் இரு இளம் பெண் விளையாட்டு வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள ஒலிம்பிக் வீரர் அனில் குமார், வேறு ஏதோ நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
நாடு முழுக்க விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிக்கும் வகையில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்குச் சொந்தமான விடுதிகள் உள்ளன. அப்படித் தான் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் இயங்கி வரும் விடுதில் பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று வியாழக்கிழமை இரு வீராங்கனைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இருவர் உயிரிழப்பு
உயிரிழந்த மாணவிகள் 16 வயதான கபடி வீராங்கனை சாண்ட்ரா, 18 வயதான தடகள வீராங்கனை வைஷ்ணவி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 10ம் வகுப்பு படிக்கும் சாண்ட்ரா திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. இவர்களது மரணம் கேரலா முழுக்க கடும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஏதோ தவறாக இருக்கு
இதற்கிடையே இவர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரர் அனில் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகமான ஏசியானெடிடம் பேசிய அவர், "குழந்தைகள் திடீரெனச் சும்மா தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாக நான் நம்புகிறேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அனில் குமார் வலியுறுத்தினார். காவல்துறை தன்னை அணுகினால் மேலும் தகவல்களைத் தெரிவிப்பேன் என்றும், விசாரணை நடைபெறுவதால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இந்திய விளையாட்டு ஆணையத்தின் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பொறுப்பாளர் மாணவர்களிடம் தவறாக நடந்துகொள்வதாகவும் அவர் கூறினார். சென்ட்ரல் மற்றும் கேரள மண்டல பொறுப்பாளர்களுடன் தனக்குப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் விளையாட்டு ஆணையத்தில் இருந்து விலகியதாகவும் அனில் குமார் தெரிவித்தார்.
நிறுவனத்தில் பல துன்புறுத்தல் புகார்கள் இருப்பதாகவும், முன்பு அங்கு வேலை செய்து வந்த ஊழியர் ஒருவரே இதுபோன்ற துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாகவும் அனில் குமார் குறிப்பிட்டார். விடுதியில் குழந்தைகள் நடத்தப்படும் விதம் குறித்து கவனம் தேவை என்றும் அவர் எச்சரித்தார். அனில் குமாரின் இந்தக் கருத்துகள் மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. மாணவிகளுக்குச் சில மோசமான சம்பவங்கள் நடந்திருக்குமோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
போலீஸ் தகவல்
போலீசார் தகவல்படி, நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் வெளியானது. காலைப் பயிற்சிக்கு மாணவிகளை எழுப்ப, சக மாணவிகள் அவர்களின் ரூமை தட்டியுள்ளனர். இருப்பினும், யாரும் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து காப்பாளரும் அங்கு வந்த நிலையில், கதவு உடைக்கப்பட்டது. உள்ளே, இரண்டு மாணவிகளும் மின்விசிறிகளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
மேலும், தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், இந்த முடிவை எடுத்ததற்காகப் பெற்றோர்களிடம் மாணவிகள் மன்னிப்புக் கேட்டிருந்தாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அதில் வேறு என்ன இருந்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. இயற்கைக்கு மாறாத மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையிலேயே வழக்கு விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications