சபரிமலையில் மலையாள பிராமணர்கள் மட்டுமே தலைமை பூசாரி! கேரள உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!
திருவனந்தபுரம்: சபரிமலையில் மலையாள பிராமணர்கள் மட்டுமே தலைமை பூசாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற திருவாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பு செல்லும் என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் மேல்சாந்தி பதவிக்காலம் ஒரு வருடம். ஆண்டுதோறும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். வேத மந்திரங்கள், சாஸ்திரங்கள் எல்லாம் முறைப்படி கற்று தேர்ந்து மற்ற கோயில்களில் மேல்சாந்தியாக அனுபவம் வாய்ந்த ஒருவரையே சபரிமலையிலும் மேல்சாந்தியாக தேர்வு செய்வார்கள்.

ஒருவருக்கு ஒரு முறை தான் என்கிற ரீதியில் வாழ்நாளில் ஒருவர் ஒரு முறை தான் சபரிமலை மேல்சாந்தியாக இருக்க முடியும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோரின் பெயர்களை சீட்டில் எழுதி குடுவையில் போட்டு குழந்தையை வைத்து எடுக்கப்படும் சீட்டில் யார் பெயர் உள்ளதோ அந்த நபர் ஓராண்டுக்கு சபரிமலையிலேயே தங்கி மேல்சாந்தியாக இருப்பார்கள்.
இதனால் தான் சபரிமலைக்கு யாத்திரை வரும் பக்தர்கள் பலரும், எப்பாடுபட்டாவது மேல்சாந்தியின் ஆசியை பெறுவதில் குறியாக உள்ளனர். இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. அப்போது, மலையாள பிராமணர்கள் மட்டுமே தலைமை பூசாரியான மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருவாங்கூர் தேவசம் போர்டின் இந்த நிபந்தனையை எதிர்த்து பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்த நிபந்தனை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், அந்த தீர்ப்பில் கோயிலுக்குள் செல்லும் உரிமை என்பது பூஜை செய்வதற்கான உரிமை அல்ல என்றும் பூஜை செய்வதற்கான உரிமை அல்ல. கோவில் விவகாரங்களில் பாரம்பரிய நடைமுறைகளை தேவசம் போர்டு கடைபிடிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தின் 17வது பிரிவை மீறுவது ஆகாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications