ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி.. நாளை இறுதி சடங்கு! சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது உம்மன் சாண்டியின் உடல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி நேற்று உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று அவரது உடல் பெங்களூரிலிருந்து சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
காங்கிரஸ்காரர்கள் என்றாலே பண்ணையார்கள் என்கிற பிம்பம் ஒரு காலத்தில் இருந்தது. அதை உடைத்ததில் உம்மன் சாண்டிக்கு மிகப்பெரிய பங்குண்டு. 7 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த இவர், எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்திருந்தார். இரண்டு முறை சாதாரண வகுப்பு பெட்டியில் தனியாக ரயில் பயணம் செய்திருக்கிறார். இந்த எளிமை மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்தது.

இந்த அரசியல் பயணங்களுக்கான தொடக்கம் அவருடைய கல்லூரி பருவம்தான். கோட்டை மாவட்டத்தில் குமரகத் காரட் வெள்ளக்காலில் கே.ஓ.சாண்டி மற்றும் பேபி சாண்டியின் மகனாய் 1943ம் ஆண்டு பிறந்த உம்மன் சாண்டி, தனது 24வது வயதில் கே.எஸ்.யு மாணவர் அமைப்பின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் எம்எல்ஏவாகவும், தொழில்துறை அமைச்சர் (1977-1978), உள்நாட்டுத் துறை அமைச்சர் (1982), நிதித்துறை அமைச்சர் (1991-1994), எதிர்க்கட்சித் தலைவராகவும் (2006-2011) பணியாற்றியுள்ளார்.
அதேபோல 2004-2006 மற்றும் 2006-2011 என இரண்டு முறை முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் புற்றுநோயுடன் போராடி வந்திருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு கேரள காங்கிரசுக்கு பேரிழப்பாகும்.
நேற்று பிற்பகல் பெங்களூரிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று அவரது உடல் சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்படுகிறது. அதேபோல, நாளை இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு கேரள அரசு ஒரு நாள் விடுமுறை மற்றும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்திருக்கிறது.
கடந்த 1970ம் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் பிரனாயி விஜயனும், உம்மன் சாண்டியும் ஒன்றாக எம்எல்ஏவாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சுட்டிக்காட்டிய இடதுசாரி தலைவர்கள், 50 ஆண்டுகளாக தொடர்ந்து தோற்கடிக்கப்படாமல் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மிகவும் குறைவுதான். இந்த சாதனைக்கு சொந்தக்காரர் உம்மன் சாண்டி என்று இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications