மின்னல் வேகத்தில் பரவும் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல்! கேரளாவில் அடுத்த "சம்பவம்!" மனிதர்களுக்கு ஆபத்தா
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் நம்மைப் படுத்திய பாட்டிற்குப் பின்னர், அனைத்து நோய்களையும் நாம் எச்சரிக்கை உடனேயே கவனித்து வருகிறோம். ஆங்காங்கே ஏற்படும் நோய் பரவலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சமீபத்தில் தான் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு மங்கி பாக்ஸ் பரவியது. இதை உலக சுகாதார அமைப்பும் கூட பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்தது.

கேரளா
இந்தச் சூழலில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் வயநாட்டில் இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் உறுதியாகி உள்ளது. அங்கு அடுத்தடுத்து சுமார் 44 பன்றிகள் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாகப் பண்ணைகளில் உள்ள பன்றிகளைக் கொல்லும் பணி தொடங்கியுள்ளது. நேற்று ஜூலை 25 வரை வயநாட்டில் உள்ள 5 பண்ணைகளில் 685 பன்றிகள் கொல்லப்பட்டு உள்ளன.

பன்றிகள் கொலை
இது தொடர்பாகக் கால்நடை நோய் புலனாய்வு அதிகாரி டாக்டர் மினி ஜோஸ் கூறுகையில், "வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து 1 கிமீ சுற்றளவில் இருக்கும் பண்ணைகளில் இருந்த பன்றிகள் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதி சானிடைஸ் செய்யப்பட்டு உள்ளது. அழிக்கப்பட்ட பன்றிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இந்த பணியில் ஈடுபட்ட ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்" என்றார்.

விவசாயிகள்
நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். வயநாட்டில் பன்றி பண்ணைகள் அதிகமாகவும் நெருக்கமாகவும் உள்ளன. அங்கு மட்டும் சுமார் 244 விவசாயிகள் குட்டிகளைச் சேர்த்து சுமார் 10 ஆயிரம் பன்றிகளை இறைச்சிக்காக வளர்க்கின்றனர். இந்த வைரஸ் பரவல் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

மனிதர்களுக்குப் பரவுமா
இருப்பினும், இது தொடர்பாகத் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். பன்றிக்காய்ச்சல் மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவாது என்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதால் அதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வயநாடு மாவட்ட கால்நடை பராமரிப்பு அதிகாரி டாக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

தடை
பன்றிக் காய்ச்சல் உறுதியாகி உள்ள நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி போக்குவரத்துக்குக் கேரள அரசு தடை விதித்து உள்ளது. மாவட்ட எல்லைகளில் சோதனை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேநேரம் வயநாட்டில் பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பன்றி மாமிசம் வாங்கத் தடை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இழப்பீடு
இந்த ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் முதலில் கென்யா நாட்டில் 1910ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. கடந்த 2020இல் இது இந்தியாவுக்குப் பரவியது. இது தொடர்பாக மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜூலை முதலே கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பன்றிக் காய்ச்சலால் கொல்லப்படும் பன்றிகளின் எடையைப் பொறுத்து ஒரு பன்றிக்கு ரூ. 2,200 முதல் 15 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை என்று பன்றி வளர்ப்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications