பரம்பிக்குளம் - ஆழியார் ஒப்பந்தம் மீறல்... முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!
திருவனந்தபுரம்: பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை மீறி, தமிழகம் தண்ணீரை பயன்படுத்துகிறது என, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக - கேரள அரசுகளுக்கிடையே, ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் வழங்கல், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் இதர உபயோகங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு, 09.11.1958 முதல் முன் தேதியிட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் ஆகிய தாலுகாக்கள் பயனடைகின்றன. கேரள மாநிலத்தின் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களும் பயனடைகின்றன.
பொள்ளாச்சி அருகே, கேரள வனப்பகுதியில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் பிரதான அணையான, பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. மொத்தம் 17.82 டி.எம்.சி., நீர் கொள்ளளவும் கொண்ட,இந்த அணைக்கு, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்வதால், சோலையாறு அணை நிரம்பி, பரம்பிக்குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த, 19ம் தேதி அணை நீர்மட்டம், 70.50 அடியாக உயர்ந்ததையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், பரம்பிக்குளம், ஆழியார் ஒப்பந்தத்தை மீறி, தமிழகம் தண்ணீரை பயன்படுத்துகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது : பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் பெறும் உபரி நீரை பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.930 கோடியில் நீரை பயன்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பது, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மீறிய செயல். புதிய திட்டங்களுக்கு ஆழியார் நீரை தமிழகம் பயன்படுத்துவதால், கேரளாவுக்கு தற்போது தேவைப்படும் 7.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்காது. இத்திட்டத்தில் மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் ஒப்பந்த விதிமுறைகள் குறித்து கேரள முதல்வர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications