கேரளா வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவனந்தபுரம்: வைக்கம் போராட்டத்தை பெரியார் வழிநடத்தியதன் நினைவாக, அங்கு அவருக்கு நினைவகம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. புதிய நூலகத்தையும், நினைவகத்தையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
வைக்கம் ஆலய நுழைவு போராட்டத்தில் பெரியார் பங்கேற்றிருந்த நிலையில், இப்போராட்டத்தின் வெற்றியின் நினைவாக வைக்கத்தில் 1994ம் ஆண்டு பெரியார் நினைவகம் திறக்கப்பட்டிருந்தது. இந்த நினைவகத்தை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.8.14 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், இது இன்று திறந்து வைக்கப்படுகிறது. புதிய நினைவகத்தில் பெரியாரின் சிலை, அவரின் வாழ்க்கையை விவரிக்கும் புகைப்படங்கள், நூலகம், பார்வையாளர்கள் மாடம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன.

நினைவகத்தை திறக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று கேரளா சென்றிருந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று அவர் நினைவகத்தை திறந்து வைத்துள்ளார். திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி முன்னிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், கோட்டயம் எம்.பி. கே.பிரான்சிஸ் ஜார்ஜ், வைக்கம் எம்எல்ஏ சி.கே.ஆஷா, மாவட்ட ஆட்சியர் ஜான் வி.சாமுவேல் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
வைக்கம் போராட்டம்: கேரள மாநிலம் அப்போது திவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்தது. இந்த சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கம் பகுதியில் கோயில் ஒன்று இருந்தது. இந்த கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்பது அப்போதிருந்த எழுதப்படாத விதி. இதற்கு எதிராக ஆங்காங்கே கலக குரல்கள் எழுந்தன. குறிப்பாக கேசவன் நாயர், மாதவன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் என 3 நபர்கள் இதற்கான போராட்டத்தை நடத்த முன் வந்தனர்.
திட்டமிட்டபடி போராட்டமும் நடைபெற்றது. ஆனால், போராட்டத்தில் இவர்கள் மூவருடன் சேர்ந்து வெறும் 19 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். எனவே அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இங்குதான் இந்த போராட்டத்தின் வடிவமே மாறுகிறது. அதாவது சிறையிலிருந்தே மேற்குறிப்பிட்ட மூவரும் பெரியருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
இந்த கடிதம் பெரியார் கைக்கு சென்று சேர்கிறது. இதனையடுத்து அவர் வைக்கம் வருகிறார். அங்கே போராட்டத்திற்காக மக்களை தயார் படுத்துகிறார். போராட்டம் பெரிய அளவில் நடக்கிறது. அது வெற்றியும் பெறுகிறது. இந்த வெற்றியின் 100வது ஆண்டை நினைவு கூரும் விதமாகவே தற்போது வைக்கத்தில் பெரியார் நினைவகம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications