எச்சரித்த கிங்கினி கிளி.. நிலச்சரிவில் தப்பித்த குடும்பத்தினர் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் அவரது குடும்பம் மட்டுமல்லாமல், அவரது நண்பர் மற்றும் அண்டை வீட்டாரின் குடும்பமும் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29ம் தேதி ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன்கொண்டவை. அந்த வகையில், வயநாட்டைச் சேர்ந்த இளைஞர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான கிங்கினி என்ற கிளி எச்சரிக்கை செய்ததால் நிலச்சரிவில் இருந்து அவரது குடும்பம் மட்டுமல்லாமல், அவரது நண்பர் மற்றும் அண்டை வீட்டாரின் குடும்பமும் நிலச்சரிவில் இருந்து தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் கிங்கினி என்ற செல்லக் கிளியை வளர்த்து வருகிறார். நிலச்சரிவுக்கு முந்தைய தினம் காலனி சாலை என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி நந்தாவின் வீட்டிற்கு வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது, தங்கள் செல்லப்பிராணி கிங்கினியையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கடுத்த நாள் அதிகாலையில், அதவாது இரண்டாவது நிலச்சரிவுக்கு முன்பு கிங்கினி அதன் கூண்டுக்குள் திடீரென ஒருவிதமாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயங்கர சப்தத்துடன் அலறத் துவங்கியதுடன், இரும்புக் கூண்டை பலமாகத் தாக்கியுள்ளது. இதில், அந்தக் கிளியின் இறகுகள் உதிரத் தொடங்கியுள்ளன.
தூங்கிக் கொண்டிருந்த வினோத் கிளியின் அலறல் சப்தம் கேட்டு எழுந்தபோது, ஏதோ ஒரு பெரிய பிரச்னை ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்துள்ளார். சூரல்மலையின் நிலையை ஏற்கனவே அறிந்திருந்ததால், உடனடியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜிஜின், பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரை உடனடியாக அழைத்துள்ளார். விழித்தெழுந்த அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே வந்து பார்த்தபோது வெளியில் சேற்று நீர் வழிந்தோடுவது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அனைவரும் தங்களது வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுள்ளனர்.
நிலச்சரிவில் வினோத் மற்றும் ஜிஜின் ஆகியோரின் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரின் வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன. வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர். செல்லக்கிளி எச்சரித்ததால் பலரும் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications