ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
பிஎப்ஐ தடைக்கு பின்னர் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த அமைப்பு குறித்த அதிர்ச்சிகரமான செய்திகளையும் என்ஐஏ வெளியிட்டு வருகிறது.
திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க ரிப்போர்ட்டர் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு (பிஎப்ஐ) நியமித்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பிஎப்ஐ அமைப்புக்காக பல வலதுசாரி அமைப்புகளை உளவுபார்த்து தகவல் திரட்டியதாக ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பிஎப்ஐ அமைப்புக்காக இதுபோல எத்தனை பேர் ரிப்போர்ட்டர்களாக களத்தில் இருக்கிறார்கள்; அவர்கள் என்னென்ன தகவல்களை திரட்டியுள்ளார்கள் என்பது குறித்து என்ஐஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

அதிரடி தடை
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது; நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் பிஎப்ஐ ஈடுபட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி வந்தது. இந்த சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிஎப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது உள்ளிட்ட பல தேசவிரோத நடவடிக்கையில் பிஎப்ஐ ஈடுபடுவதாக கூறி அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

"கொலைப் படையினர்"
இந்த தடைக்கு பின்னரும் பிஎப்ஐ அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதும், அவர்கள் குறித்த அதிர்ச்சிகரமான செய்திகளை என்ஐஏ தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கர்நாடகாவில் நடைபெற்ற பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக பிஎப்ஐ நிர்வாகிகள் 20 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்கிரிகை தாக்கல் செய்தது. அதில், இந்தியாவில் 2047-ம் ஆண்டுக்குள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பிஎப்ஐ இலக்கு நிர்ணயித்திருப்பாகவும், இதனை செயல்படுத்த தடையாக இருப்பவர்களை தீர்த்துக்கட்ட கொலைப் படையினரை (Killer Squads) அந்த அமைப்பு வைத்திருப்பதாகவும் திடுக்கிடும் தகவலை என்ஐஏ தெரிவித்தது.

"பாஜகவை உளவு பார்த்த பிஎப்ஐ"
இந்நிலையில், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 17-ம் தேதி என்ஐஏ தீவிர சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவரை ரகசிய இடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இதுகுறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் என்ஐஏ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஎப்ஐ ரிப்போர்ட்டர்கள்
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், "தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் முகமது சாதிக் பிஎப்ஐ அமைப்புக்காக பாஜகவையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் பல வருடங்களாக வேவு பார்த்து வந்திருக்கிறார். பழ வியாபாரி போல இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கொல்லத்தில் நடைபெறும் பாஜக, ஆர்எஸ்எஸ் நிகழ்வுகள், அதில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரின் பெயர்களை பிஎப்ஐ-க்கு இவர் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் ரிப்போர்ட்டர் என்ற பெயரில் இந்த உளவு வேலைக்காக அவர்கள் பலரை நியமித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ரிப்போர்ட்டர்கள் அனுப்பும் தகவலை அடிப்படையாக கொண்டு, குறிப்பிட்ட சிலரை கொலை செய்யும் 'அசைன்மெண்ட்' கொலை படையினருக்கு வழங்கப்படுகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications