உங்க தலைவர் உடல்நலம் எப்படியிருக்கிறது? ஸ்டாலின் பற்றி திமுக எம்.பி.யிடம் விசாரித்த பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க தமிழகம் வருமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு திமுக எம்.பி. ராஜேஷ் குமார் நேரில் அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
அத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய அழைப்புக் கடிதத்தையும் ராஜேஷ் குமார் வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நலம் பற்றி அதிக அக்கறையோடு ராஜேஷ் குமார் எம்.பி.யிடம் கேட்டறிந்திருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

செஸ் ஒலிம்பியாட்
வரும் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

கேரள முதலமைச்சர்
அந்த வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க தமிழகம் வருமாறு திமுக எம்.பி.ராஜேஷ்குமார் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். சட்டசபையில் அமர்ந்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. வந்திருக்கும் தகவலை அதிகாரிகள் தெரியப்படுத்தினர். உடனடியாக எந்த தாமதமும் செய்யாமல் அவரை மேலே வரச் சொல்லுங்கள் என அழைத்து அமர வைத்துப் பேசினார் பினராயி.

ஸ்டாலின் உடல்நலம்
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது உடல் நலம் பற்றி அதிக அக்கறையோடு ஆழமாக விசாரித்திருக்கிறார் பினராயி விஜயன். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வாய்ப்பிருந்தால் தாம் உறுதியாக வந்து பங்கேற்பேன் என்ற உறுதியையும் ராஜேஷ் குமார் எம்.பி.யிடம் வழங்கியிருக்கிறார்.

தேநீர் சாப்பிடுங்க
அழைப்பிதழ் கொடுத்த கையோடு கேரள சட்டசபையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ராஜேஷ் குமார் எம்.பி.யை, அமர்ந்து தேநீர் குடித்துவிட்டுச் செல்லுமாறு விருந்தோம்பல் செய்து கவனித்துள்ளார் பினராயி. மேலும், ஸ்டாலினை நான் கேட்டதாகச் சொல்ல வேண்டும் எனக் கூறி ராஜேஷ்குமாரை வழியனுப்பி வைத்துள்ளார் பினராயி.












Click it and Unblock the Notifications