பார்ட்டி கொடுத்த சொகுசு பிளாட்.. மறுத்த பினராயி விஜயன்.. வாடகை வீடு "செல்ல" பின்னணி காரணம் இதுதான்
திருவனந்தபுரம்: கேரள தேர்தலில் தோல்வியடைந்து முதல்வர் பதவியை இழந்த பினராயி விஜயன், திருவனந்தபுரம் நகரில் வாடகை வீட்டிற்கு குடி போயிருக்கிறார்.. டெல்லியில் நடந்த சிபிஎம் பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய பிறகு, திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பு பகுதியில் உள்ள 2 மாடி வாடகை வீட்டிற்கு அவர் குடியேறிருக்கிறார்.. கட்சி வீடு வேண்டாம் என்று சொல்லி வாடகை வீட்டை தேர்ந்தெடுத்தது கேரள அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது..
கேரளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெறாததால் ஆட்சியை இழந்தது.. இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸை காலி செய்தார்..

பினராயி விஜயன்
அதன்பிறகு அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டது.. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பினராயி விஜயன், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்க முடிவு செய்தார்.. கட்சி வசதி வேண்டாம் என்று சொல்லி தனியாக வாடகை வீடு தேடிய அவரது முடிவு கட்சிக்குள்ளேயே பெருத்த கவனம் பெற்று வருகிறது.
வீட்டின் பாதுகாப்பிற்காகத் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பேக்கரி சந்திப்பில் ரிசர்வ் வங்கிக்குப் பின்புறம் உள்ள நிம்ஸ் மைக்ரோ மருத்துவமனை வளாகத்தில்தான் இந்த வாடகை வீடு உள்ளது. இது நிம்ஸ் மைக்ரோ மருத்துவமனைக்குச் சொந்தமான வீடாகும். வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்கள் சேர்த்து மொத்தம் 4500 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும்.
வாடகை வீடு 4500 சதுர அடி
அதுமட்டுல்ல, முதல்வர் பதவியிலிருந்து விலகிய பினராயி விஜயன் தங்குவதற்காக சி.பி.எம் மாநிலத் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி சென்டர் அருகே உள்ள சிந்தா பப்ளிகேஷன் கட்டிடத்தில் இரண்டு பிளாட்டுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், செல்லப்பிராணிகளைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்ப்பதற்கு ஏதுவாக வீட்டை சுற்றி இடவசதிகொண்ட இந்த வாடகை வீட்டையே பினராயி விஜயன் தேர்ந்தெடுத்தாராம்.
டெல்லி சென்று கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பினராயி விஜயன், நேற்று இரவு பேக்கரி சந்திப்பில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்றார்.. அங்கு முன்னாள் அமைச்சரும் அவரது மருமகனுமான பி.ஏ.முகமது ரியாஸும், மூத்த கட்சி தலைவர் சிவன்குட்டியும் அவரை வரவேற்றனர்.. அடுத்த ஐந்து ஆண்டுகளும் அவர் குடும்பத்தினருடன் இங்கேயே தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது..
எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏற்பாரா
ஆனால், பினராயி விஜயன் எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏற்பாரா என்ற கேள்விக்கு இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை.. பொலிட் பீரோ கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான கேள்விகளை நேரடியாக பதில் சொல்லாமல் பேசினார்.. கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பதே இதன் பொருள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தோல்விக்கான பொறுப்பு பினராயி விஜயன் ஒருவரின் மீது மட்டும் சுமத்தப்படக்கூடாது, இது கட்சியின் கூட்டுப் பொறுப்பு என்று பேபி கூறினார்.. தவறுகளை திருத்திக்கொள்வோம், தலைமையில் மாற்றம் தேவையா என்று கட்சி ஆலோசிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.. கடுமையான தோல்விக்குப் பிறகும் பினராயிக்கு கட்சிக்குள் ஆதரவு குறையவில்லை என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன..
அரசு வசதியுடன் வேறு வீடு
கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பினராயி விஜயனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்வு செய்தால், அந்தப் பதவிக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லமான கண்டோன்மென்ட் ஹவுஸில் அவர் குடியேற வாய்ப்பு உள்ளது.
அதாவது தற்போது வாடகை வீட்டில் தங்கியிருக்கும் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தால் அரசு வசதியுடன் கூடிய வேறொரு இல்லத்திற்கு மாற வாய்ப்பு உள்ளது.. அடுத்த சில நாட்களில் கட்சி எடுக்கும் முடிவே பினராயியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கேரள அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன..!!












Click it and Unblock the Notifications